'ஃபைபர் புராட்பேண்ட்' எனப்படும் கண்ணாடி இழை அகன்ற அலை வரிசை இணைப்பின் வேகத்தை வினாடிக்கு ஒரு கிகாபைட்டிலிருந்து 10 கிகாபைட்டுக்கு உயர்த்த சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது. தற்போது சிங்கப்பூர் வீடுகளில் கண்ணாடி இழை அகன்ற அலை வரிசை இணைப்பின் வேகம் வினாடிக்கு ஒரு கிகாபைட்டாக உள்ளது.
நாட்டின் மின்னிலக்கத் தொடர்புக் கட்டமைப்பை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இது அடங்கும். 5ஜி கட்டமைப்புக்கான சூழலை விரிவுபடுத்துவது, 6ஜி முறை தொடர்பிலான ஆய்வுக்கு செலவு செய்வது ஆகியவையும் நடவடிக்கைகளில் அடங்கும் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் வருங்கால தொடர்பு, இணைப்பு ஆய்வுக் கூடத்தின் அதிகாரபூர்வ திறப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டபோது அவர் பேசினார்.
"கொள்ளைநோய்ப் பரவலின்போது நமது வலுவான இணையத் தொடர்புகள் சிங்கப்பூரின் மீள்திறனுக்குப் பங்களித்தன. மின்னிலக்கச் சூழலுக்கு நமது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மாற்றிக்கொள்ள அது வகைசெய்தது," என்று திருமதி டியோ குறிப்பிட்டார். எனினும், மிகை மெய்நிகர் தொழில்நுட்பம், மெய்நிகர் தொழில்நுட்பம், 'மெட்டாவெர்ஸ்' எனும் யதார்த்த மின்னிலக்க உலகம் போன்றவற்றுக்கு மேம்பட்ட அகன்ற அலை வரிசை இணைப்புத் தேவை என்பதை அவர் சுட்டினார்.
தங்களின் மின்னிலக்கத் தொடர்புகளை மேம்படுத்த இதர நாடுகளும் முயற்சி எடுத்துவருவதாகத் திருமதி டியோ சொன்னார். உதாரணமாக, தனது நாட்டில் பாதி பேர் இவ்வாண்டிறுதிக்குள் வினாடிக்கு 10 கிகாபைட் வேகம் கொண்ட கண்ணாடி இழை அகன்ற அலை வரிசை இணைப்பைப் பயன்படுத்தவேண்டும் என்பது தென்கொரியாவின் இலக்கு என்று அவர் தெரிவித்தார்.
அகன்ற அலை வரிசை மேம்பாடு குறித்த மேல்விவரங்களைத் திருமதி டியோ வெளியிடவில்லை.

