குற்றவாளிகளைத் திருத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆசிய பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த அரசாங்க அமைப்புகள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கான அனைத்துலக மாநாடு தொடங்கியுள்ளது. மாநாடு கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக ஈராண்டுகளாக இம்மாநாடு நடக்கவில்லை.
இந்த ஐந்து நாள் மாநாட்டில் 21 நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மெய்நிகரில் சந்திப்பர். சிறையில் ஏற்படும் அவசர நிலையைக் கையாள்வது, குற்றவாளிகளின் தேவைகளை மேலும் சிறப்பாகப் பூர்த்திசெய்வது போன்றவற்றைப் பற்றி அதிகாரிகள் கலந்து பேசுவர்.
சிங்கப்பூர் நடத்தும் இவ்வாண்டுக்கான 'ஏஷியன் அண்ட் பசிபிக் கான்ஃபிரன்ஸ் ஆஃப் கொரெக்ஷனல் அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ்' எனும் மாநாட்டில் பங்கேற்க 700க்கும் அதிகமானோர் பதிவுசெய்தனர். ஆஸ்திரேலியா, கனடா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அவர்களில் அடங்குவர். 'குற்றவாளிகளைத் திருத்தும் நடவடிக்கைகளில் புதிய எல்லைகளை வரைவது' என்பது இவ்வாண்டு மாநாட்டின் கருப்பொருள். தகவல்களைப் பகிர்ந்துகொண்டு சிறை நடைமுறைகளை மேம்படுத்துவது இலக்கு.
கொள்ளைநோய்ப் பரவலின்போது உலகளவில் குற்றவாளிகளைத் திருத்தும் முகவைகள் சவால்களை சந்தித்ததை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ குறிப்பிட்டார்.
அதே வேளையில், புதிய வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பைக் கொள்ளைநோய்ப் பரவல் அளித்ததென்றும் அவர் கூறினார்.
"சிறையில் நமது கைதிகளையும் ஊழியர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நாம் கிருமிப் பரவலுக்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் கூடுமானவரை மறுவாழ்வுத் திட்டங்களுக்கு இடையூறு வருவதைத் தவிர்த்ததோடு நேரடி சந்திப்புகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் கைதிகள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருந்துகொண்டே இருக்க வகைசெய்தோம்," என்று அமைச்சர் டியோ சொன்னார்.

