துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன்
மாண்டுகிடந்த காவல்துறை அதிகாரி
பேஃபிரண்ட் அவென்யூவில் நேற்று துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் (படம்) மாண்டது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
மாண்டவரின் உடல் 1 பேஃபிரண்ட் அவென்யூவில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஒரு கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது என்றும் ஆரம்பக்கட்ட புலனாய்வின் படி, இச்சம்பவத்தில் சூது ஏதும் இல்லை என்றும் விசாரணை தொடர்கிறது என்றும் காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாண்ட அந்த 29 வயது அதிகாரி மத்திய காவல்துறை பிரிவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது.
பேனாக்கத்தியால் தாக்கியதாக
நம்பப்படும் ஆடவர் மீது குற்றச்சாட்டு
ஒரு பேனாக்கத்தியைக் கொண்டு ஒருவரைத் தாக்கியதாக நம்பப்படும் 50 வயது சியா சியூ பூன் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்ற்ம சாட்டப்பட்டது. தாக்கப்பட்டதாக நம்பப்படும் 31 வயது நோயல் இயோ எனும் ஆடவர் நெஞ்சு, வயிற்றுப் பகுதிகளில் கடுமையான காயங்களுடன் கோல்டன் மைல் கடைத்தொகுதிக்கு வெளியே விழுந்து கிடந்திருந்தார்.
ஆயுதத்தைப் பயன்படுத்தி வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்ததாக சியா மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் சியா இக்குற்றத்தைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவசர மருத்துவ வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது திரு இயோ சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நேர்ந்த இடத்தில் ஒரு பேனாக்கத்தி கண்டெடுக்கப்பட்டது.
திருமண நாளில் மணப்பெண் மீது
பாலியல் வன்கொடுமை
திருமண நாள் இரவு விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு களைத்துப்போய் திருமண ஆடையிலேயே படுத்துறங்கிய பெண், மணமகன் தோழனாக இருந்த ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். அந்தக் குற்றத்தைப் புரிந்த 42 வயது ஆடவருக்கு நேற்று ஏழாண்டு சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
நேற்று தண்டனை விதிப்பு அறிக்கையை வாசித்த தலைமை மாவட்ட நீதிபதி விக்டர் இயோ, தன்னைத் தொடுவது தனது கணவர் என்று அந்தப் பெண் முதலில் நினைத்ததாகக் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட ஆடவர், மானபங்கம், பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களைப் புரிந்தது நிரூபிக்கப்பட்டது.
'கோஜெக்' காத்திருப்புக் கட்டணம்
மூன்று வெள்ளி
அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் 'கோஜெக்' பயணிகள் வாகனச் சேவைக்குப் பதிவுசெய்து நான்கு நிமிடங்களுக்குள் வாகனத்தில் ஏறாவிட்டால் கூடுதலாக மூன்று வெள்ளி செலுத்தவேண்டும். அதற்கும் மேல் ஓட்டுநர் காத்திருக்கும் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் கூடுதலாக மூன்று வெள்ளி செலுத்தவேண்டும்.
ஓட்டுநர் காத்திருக்கும் நேரத்தைப் பொருத்து இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ஒன்பது வெள்ளி வரை உயரலாம்.
'கோஜெக்' நிறுவனத்தின் இணையத்தளத்தில் நேற்று இது குறித்து அறிவிக்கப்பட்டது.
ஓட்டுநர்கள் காத்திருப்பதற்கான கூடுதல் கட்டண முறையை 'கிராப்' பயணிகள் வாகனச் சேவை நிறுவனம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. அதைத் தொடர்ந்து 'கிராப்'பின் போட்டி நிறுவனமான 'கோஜெக்'கும் அவ்வாறே செய்கிறது.
முன்னதாக 'கோஜெக்' ஓட்டுநர் வந்து ஐந்து நிமிடங்களுக்குள் வாகனச் சேவை ேவண்டாம் என்று முடிவுசெய்வோர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இப்போது அந்தக் கால அவகாசம் நான்கு நிமிடங்களுக்குக் குறைக்கப்படுகிறது.

