ஜூரோங் பறவைப் பூங்கா, அதற்கு அருகே இருக்கும் ஜூரோங் மலை இரண்டையும் பொழுதுபோக்குப் பசுமைப் பகுதிகளாக மாற்றுமாறு மரபுடைமை ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜூரோங் பறவைப் பூங்காவில் இருக்கும் பறவைகள், மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் அமைக்கப்படும் 'பெர்ட் பாரடைஸ்' எனும் பறவைப் பூங்காவிற்கு இடம் மாற்றப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஜூரோங் பறவைப் பூங்கா, ஜூரோங் மலை ஆகியவை இருக்கும் இடத்தை வருங்காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மரபுடைமை ஆர்வலர்கள் கருத்துரைத்துள்ளனர்.
இந்த இரு பகுதிகளின் மொத்தப் பரப்பளவு 35 ஹெக்டர். இது, 50 காற்பந்துத் திடல்களின் பரப்பளவுக்கு சமம்.
இரண்டையும் ஜேடிசி கழகக் குழுமம் நிர்வகிக்கிறது.
ஜூரோங் பறவைப் பூங்கா இருக்கும் பகுதியின் வருங்காலப் பயன்பாட்டுக்கான திட்டங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
இங்கிருக்கும் சுமார் 3,500 பறவைகளுடன் கிட்டத்தட்ட 130 ஊழியர்களும் மண்டாய்க்கு இடம் மாற்றப்படுவர்.
ஜூரோங் மலையில் அமைந்திருக்கும் பூங்காவிற்குப் பொதுவாக அதிகமானோர் வருகை தருவதில்லை. ஆனால் இந்நிலை 2029ஆம் ஆண்டு மாறலாம்.
அந்த ஆண்டு புதிதாகக் கட்டப்படும் ஜூரோங் வட்டார பெருவிரைவு ரயில் பாதையில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது. அந்த ரயில் நிலையம் மலைக்குக் கீழ் அமைந்திருக்கும்.