தெம்பனிசில் உள்ள செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே காவல்துறை முற்றுகையின்போது கத்தியை வீசி, தம் வயிற்றில் குத்திக்கொண்ட 53 மாது மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
பொது இடத்தில் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படும்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 82ல் மாது ஒருவர் கத்தியை வீசியது குறித்து காவல்துறைக்கு நேற்று மாலை 6.30 மணியளவில் தகவல் கிடைத்தது.
செயின்ட் ஹில்டாஸ் உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே அந்த மாதைக் குறைந்தது 10 காவல்துறை அதிகாரிகள் சூழ்ந்திருந்ததை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் காட்டின.
அவர்களில் குறைந்தது மூன்று அதிகாரிகள் பாதுகாப்புக் கவசங்களை அணிந்திருந்தனர்.
"இந்தச் சம்பவத்தின்போது அதிகாரிகள் மீது அந்த மாது கத்தியை வீசினார். அக்கத்தியைக் கொண்டு தம் வயிற்றில் அவர் குத்திக்கொண்டார்.
"கத்தியைக் கீழே போடுமாறும் அதிகாரிகள் பலமுறை கூறியபோதும், அதைப் பொருட்படுத்தாத அந்த மாது தொடர்ந்து கத்தியை வீசினார். தம் கழுத்தில் கத்தியை வைத்து தம்மை மேலும் காயப்படுத்திக்கொள்ளப் போவதாக அவர் மிரட்டினார்," என்று காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்த மாது தம்மை மேலும் காயப்படுத்திக்கொள்வதைத் தடுக்க, அதிகாரிகளில் ஒருவர் 'டீசர்' துப்பாக்கியால் அவரைச் சுட்டார். பின்னர், அந்த மாது கட்டுப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரு கத்திகள் கைப்பற்றப்பட்டன.
அவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் புரிந்ததன் சந்தேகத்தின் பேரில், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அவரிடம் விசாரணை நடத்தும்.