குறுக்குத் தீவு ரயில் பாதையின் இரண்டாம் கட்டம் திறக்கப்படும்போது மேற்கு வட்டாரத்தில் வசிப்போருக்கும் வேலை செய்வோருக்கும் அங்கு எதிர்காலத்தில் குடியேறுவோருக்கும் நிச்சயம் சாதகமான நிலையே காத்திருக்கிறது.
மொத்தம் 15 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ரயில் பாதையில் ஆறு நிலையங்கள் அமைந்திருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த வீடமைப்பு மற்றும் வர்த்தக மையங்களான கிளமெண்டி, வெஸ்ட் கோஸ்ட் மற்றும் கிங் ஆல்பர்ட் பார்க்கில் நிலையங்கள் இருக்கும்.
மாஜு நிலையம் 2032ல் இயங்கத் தயாராகும்போது தற்போது எம்ஆர்டி வசதியின்றி உள்ள எஸ்ஐஎம் குளோபல் எடுகேஷன், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகிய மூன்று உயர்கல்வி நிலையங்களுக்கு அது வசதியாக அமைந்திடும்.
இதற்கும் மேலாக, ஜூரோங் லேக் பகுதி, டர்ஃப் சிட்டி ஆகியவற்றில் நிலையங்கள் சேவை வழங்கும். வளர்ச்சி அதிகம் காணா இடங்களில் புதிய எம்ஆர்டி ரயில் பாதை அமைக்கப்படும் நிலையில் டர்ஃப் சிட்டி, ஜூரோங் லேக் பகுதி ஆகிய இரண்டுக்கும் நகர மறுச்சீரமைப்பு ஆணையம் பெருந்திட்டங்களை வகுத்துள்ளது.
இதற்கிடையே, அதிக மக்கள் இல்லாத இடங்களில் புதிய ரயில் பாதைகள் அமைவது தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது.

