கத்தியால் குத்தி மரணம் விளைவித்தவருக்கு ஆயுள் தண்டனை

கத்தியால் குத்தி மரணம் விளைவித்தவருக்கு ஆயுள் தண்டனை

2 mins read
30515843-04dc-4dca-b77c-75badc5fe353
சம்பவம் நிகழ்ந்த வீடு. படம்: சாவ்பாவ் -

கத்தியால் பலமுறை குத்தி மரணம் விளைவித்த நபருக்கு நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பீடோக் ரிசர்வோயர் வீட்டில் தன்னுடன் தங்கியிருந்தவருடன் வாக்குவாதம் மூண்டபோது அவரை 51 வயது நைய்ங் லின் ஐந்து முறை கத்தியால் குத்திவிட்டு வெளியேறிவிட்டார்.

மியன்மார் நாட்டைச் சேர்ந்த அவர், மறுநாள் நண்பருடன் வீட்டுக்குத் திரும்பினார்.

சன்னல் வழியாக அவர் பார்த்தபோது அறையில் இருந்தவர் அசைவற்றுக் கிடந்தார்.

இதனால் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.

இந்த வழக்கில் அவர் மீது மரணம் விளைவிக்கும் வகையில் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அவருடன் அறையில் தங்கியிருந்தவரின் பெயர் மியோ கியாவ் து.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் தேதி மாலை ஆறு மணியளவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

அப்போது நைங் அவரை கத்தியால் குத்திவிட்டார்.

மரணத்தை ஏற்படுத்தும் நோக்குடன் காயம் விளைவித்த கொலைக் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிப்பது வழக்கம்.

ஆனால் நைய்ங் லின்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்க்கவில்லை.

நைய்ங் லின்னுக்கு 50 வயதாகி விட்டதால் பிரம்படி தண்டனையிலிருந்தும் தப்பினார்.

சிங்கப்பூரில் மூத்த தொழில்நுட்பராகப் பணியாற்றிவிட்டுச் சென்ற மியோ கியாவ், குறுகிய கால விசாவில் சிங்கப்பூர் திரும்பி நைங் லின்னுடன் ஒரே அறையில் தங்கினார்.

சம்பவத்தன்று நைய்ங் லின் வேலை முடிந்தபிறகு நண்பர்களுடன் குடிக்கச் சென்றார்.

அவர், வீடு திரும்பியதும் மியோ கியாவ் து கேள்வி கேட்டதால் வாக்குவாதம் மூண்டது.

இதில் ஆத்திரமடைந்த நைங் லின் அவரைக் கத்தியால் குத்திவிட்டார்.