உலகளாவியக் கட்டமைப்பு தடுமாற்றம் அடைந்து கேள்விக்கு உள்ளாகி உள்ள நிலையில் சிங்கப்பூர் நம்பிக்கை கொள்ளவும், மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்கவும், கூடுதலாக மதிக்கப்படும் பங்காளியாக உருவாகவும் காரணங்கள் உண்டு என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல் கலைக்கழகத்தில் நடைபெற்ற ஹோ ரி ஹுவா தலைமைத்துவ விரிவுரை நிகழ்ச்சியில் திரு தர்மன் நேற்று கலந்துகொண்டு உரையாற்றினார்.
சமுதாயக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் அமைச்சரான அவர், அரசியல், உணவு, எரிசக்தி என பல்வேறு அம்சங்களில் பாதுகாப்பு குறைவு ஒரே நேரத்தில் ஏற்பட்டு வருவதாகக் கூறினார். சமூகப் பிளவுகளும் அவற்றுள் பாதுகாப்பைக் குறைத்துள்ளன என்றார் திரு தர்மன். இதனால் பல நாடுகளில் மக்களிடையே எதிர்காலம் பற்றிய நம்பிக்கை குறைந்து வருவதை பியூ கருத்தாய்வு காட்டுகிறது.
ஆனால் சிங்கப்பூர் அதற்கு விதிவிலக்காக உள்ளதை திரு தர்மன் சுட்டினார். சிங்கப்பூர் சமூக உடன்பாட்டைப் புதுப்பித்து வலுப்படுத்துவதன் வழியாகவும் எதிர்காலத்துக்குத் தேவையான ஆழமான உள்ளார்ந்த ஆற்றல்களை ஏற்படுத்திக் கொள்வதன் வழியாகவும் நம்பிக்கையுடன் இருக்கலாம் என்று மூத்த அமைச்சர் கூறினார்.