ஹாங்காங்கைவிட சிங்கப்பூரில் வர்த்தகச் செலவுகள் அதிகம்
ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு தங்கள் அலுவலகங்களையும் செயல்பாடுகளையும் மாற்ற விரும்பும் நிறுவனங்களுக்கு இங்கு எதிர்பார்த்ததைவிட செலவுகள் அதிகமாக இருக்கலாம். சிங்கப்பூரில் பணவீக்கம் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து, திறனாளர்களின் சம்பளம், அலுவலக இடங்கள், மின்சாரம், தண்ணீர் செலவுகள் போன்றவை ஹாங்காங்கைவிட வேகமாக உயர்ந்து வருகின்றன.
உலகிலேயே ஹாங்காங்கில்தான் அலுவலக வாடகைகள் ஆக உயர்வாக உள்ளன. ஆனால் சிங்கப்பூரில் வாடகைகள் கூடி வருகின்றன. இங்குள்ள வர்த்தக மைய வட்டாரத்தில் வாடகைகள் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக உயர்ந்தன.
இருப்பினும் ஹாங்காங்கைவிட முன்கூட்டியே கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது சிங்கப்பூருக்கு அனுகூலமாக உள்ளது. சிங்கப்பூரில் புதிய வர்த்தகங்கள் அதிகமாகத் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட புதிய வர்த்தகங்களின் எண்ணிக்கை, 17 மாத உச்சத்தை அடைந்தது.
கொவிட்-19, சளிக்காய்ச்சலுக்கு ஒரே தடுப்பூசி கிடைக்கக்கூடும்
அடுத்த ஆண்டு கடைசியில் கொவிட்-19 கிருமிக்கும் சளிக்காய்ச்சலுக்கும் ஒரே நேரத்தில் தடுப்பாற்றல் வழங்கும் தடுப்பூசி கிடைக்கக்கூடும். அதற்கான முதற்கட்ட பரிசோதனைகளை அமெரிக்காவைச் சேர்ந்த மொடர்னா மருந்து நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
எம்ஆர்என்ஏ வகை ஆய்வுத் தொழில்நுட்பத்தின் நீக்குப்போக்கு அதற்குக் காரணம் என்று மொடர்னா நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி போல் பர்ட்டன் கூறினார். அத்தொழில்நுட்ப முறை, நிறுவனம் வேறு நோய்களில் கவனம் செலுத்தி புதிய தடுப்பு மருந்துகளை உருவாக்க உதவுகிறது என்று அவர் கூறினார்.
மேலும், மொடர்னா நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளைக்கு ஊழியர்களை சேர்க்க வேலைவாய்ப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் துணை நிறுவனம் ஒன்றை இவ்வாண்டு அமைக்கப் போவதாக மொடர்னா கடந்த பிப்ரவரி மாதம் கூறியது.
தேசிய சேவையாளர்கள் பயன்பெற
இணையவழி பயிற்சி வகுப்புகள்
முழுநேர தேசிய சேவையாளர்கள் பயன்பெற, 75,000க்கும் மேற்பட்ட இணையவழி பயிற்சி வகுப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. தேசிய சேவைக்குப் பிந்திய வேலைக்கும் மேற்படிப்புக்கும் அவர்கள் மேலும் சிறப்பாகத் தயாராக அந்த வகுப்புகள் உதவும்.
தேசிய சேவையின்போது எந்நேரத்திலும் பயிற்சி வகுப்புக்கான இணையக் கணக்குக்கு விண்ணப்பிக்கலாம்.
ஈராண்டுகளுக்கு அது செயல்படும். சுமார் 135 பிரிவுகளில் இணையவழி பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
மென்பொருள் குறியீட்டை உருவாக்கும் பைத்தன் மிஷின் லெர்னிங் பயிற்சிகள், நிர்வாகத்திறன், மின்னியல் புகைப்படம் எடுத்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.
சில வகுப்புகளை எடுத்துப் படித்தால், பலதுறைத் தொழில்கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியில் சில பாடங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
தற்காப்பு அமைச்சும் உள்துறை அமைச்சும் என்டியுசி லெர்னிங்ஹப், என்டியுசி வேலைவாய்ப்பு, வேலைப் பயிற்சிக் கழகம் ஆகியவற்றுடன் சேர்ந்து வகுப்புகளை வழங்கும்.