ஐக்கிய நாட்டு அமைப்பின் இவ்வாண்டு பருவநிலை மாற்ற மாநாட்டில் (சிஓபி27) பசுமை இலக்குகளை எட்டுவதற்கு, நாடுகளை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கை ஆற்றுவது சிங்கப்பூருக்குக் கடினமாக இருக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றநிலை, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரால் ஐரோப்பாவில் நிலவும் எரிசக்தி நெருக்கடி போன்றவற்றை திருவாட்டி ஃபூ அதற்குக் காரணமாகச் சுட்டினார்.
தேசிய இளையர் மன்றம் ஏற்பாடு செய்த தேசிய இளையர் கலந்துரையாடலில் திருவாட்டி ஃபூ நேற்று முன்தினம் பேசினார். கரிம வெளியேற்றம் அறவே இல்லாத எதிர்காலத்தை நோக்கி எனும் தலைப்பில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் வேண்டும் என்றும் பசுமை முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மற்ற நாடுகளுக்கு நினைவூட்ட தம்மால் முடிந்தவரை முயற்சி செய்யப் போவதாக திருவாட்டி ஃபூ கூறினார்.
"ஆனால் சிஓபி27 மாநாடு அவ்வளவு எளிதாக இருக்காது என்பதே என் அனுமானம்," என்றார் திருவாட்டி ஃபூ.
இருப்பினும், சிங்கப்பூர் பசுமை திட்டத்தில்' உள்ள இலக்குகளை எட்ட அரசாங்கம் முழுமையாகக் கடப்பாடு கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார். வரும் 2050ல் சிங்கப்பூரில் கரிம வெளியேற்றத்தைக் குறைத்து அதை அகற்றுவது அத்திட்டத்தின் இலக்காகும்.
உலகில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் சிங்கப்பூரின் ஆக்ககரமான செல்வாக்கை அதிகரிப்பது பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய அக்கறை உள்ளவர்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மற்ற நாடுகளுக்கு பாதிப்பில்லாமல் சிங்கப்பூர் சுற்றுச்சூழலுக்கு அதிகக் கேடு ஏற்படுத்தாத எரிசக்திக்கு மாறலாம் என்றும் நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.
கலந்துரையாடலில் கலந்துகொண்ட மற்ற பேச்சாளர்களில் ஒருவரான சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழக ஆய்வாளர் மெலிசா லோ, சிங்கப்பூர் லாவோசிலிருந்து நீர் எரிசக்தியை இறக்குமதி செய்கிறது என்பதைச் சுட்டினார்.
இதுபோன்ற திட்டங்கள் சுற்றுச்சூழல் கேட்டை ஏற்படுத்தலாம் என்றும் நீர் அணைகளுக்கு அருகிலான காடுகள் அழிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், எல்லா மனித நடவடிக்கைகளாலும் சுற்றுச்சூழலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று கூறப்படும் மின்வாகனங்களில்கூட வளங்களை அதிகம் பயன்படுத்தும் மின்கலங்கள் உள்ளதை அவர் சுட்டினார்.
மனிதர்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருந்துகொண்டுதான் இருக்கும். அதை எப்படிக் குறைத்து மட்டுப்படுத்துவது என்பதே கேள்வி என்று திருவாட்டி ஃபூ கூறினார்.
ஒருவரது தனிப்பட்ட பழக்க வழக்கங்களை மாற்றலாம் என்று திருவாட்டி ஃபூ பரிந்துரைத்தார்.
தேவை இல்லாதவற்றை வாங்கு வதைத் தவிர்ப்பதுடன் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான பொருள்களை வாங்கலாம் என்றார் அவர்.

