மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் இருந்து தப்புவதற்காக இரண்டு பேர் கடைவீடு ஒன்றின் உச்சியில் ஏறி ஓடினார்கள். கடைசியில் அந்த இருவரும் பிடிபட்டனர். இந்தச் சம்பவம் கேலாங்கில் நிகழ்ந்தது.
அதிகாரிகளிடம் பிடிபட்டுவிடக் கூடாது என்ற அவசரத்தில் தங்கள் கைப்பைகளையும் சாமுராய் கத்திகளையும் விட்டுவிட்டு அந்த இரு வரும் தப்பி ஓட முயன்றனர்.
அந்த இருவரில் ஒருவர் 36 வயது சிங்கப்பூரர். மற்றொருவர் 38 வயது நிரந்தரவாசப் பெண்மணி. இந்த விவரங்களை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அறிக்கையில் தெரிவித்தது.
அதிகாரிகள் தீவு முழுவதிலும் ஐந்து நாள் சோதனைகளை நடத்தினர். அவற்றில் மொத்தம் 71 பேர் பிடிபட்டனர். கைதானவர்கள் போதைப்பொருள் குற்றவாளிகள் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.
கேலாங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் நேரத்தில் ஒரு கடைவீட்டின் உள்ளே சென்று சோதனை நடத்த அதிகாரிகள் முயன்றனர். அதிகாரிகள் திரும்பத்திரும்ப எச்சரித்தும் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் கதவைத் திறக்கவே இல்லை.
வீட்டை கண்காணித்த அதிகாரிகள், இரண்டு பேர் வீட்டின் சன்னல் வழியாக வெளியேறி கூரையில் ஏறி ஓடியதைப் பார்த்தனர்.
ஆடவர் வேறொரு வீட்டில் தாவி ஏறி ஓடியபோது கைதானார். அந்தப் பெண்மணி கூரையிலேயே பிடிபட்டார். அந்த இருவரும் போதைப் புழங்கிகள் என்று நம்பப்படுகிறது.
அதிகாரிகள், 12 கிராம் ஐஸ் உள்ளிட்ட பல போதைப்பொருள்களை, அந்த இருவரும் இருந்த கடை வீட்டில் கைப்பற்றினர். சாமுராய் கத்தி உட்பட ஆபத்தான ஆயுதங்களையும் அங்கு அதிகாரிகள் கண்டனர்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடத்திய சோதனைகளில் 158 கிராம் ஹெராயின், 77 கிராம் ஐஸ், 90 கிராம் கஞ்சா, 1 கிராம் ரசாயனப்பொருள், 28 எரிமின்-5 மாத்திரைகள், ஜிஹெச்பி என்ற ரசாயன திரவப்பொருள் இருந்த 15 போத்தல்கள் ஆகியவை பிடிபட்டன.
பிடிபட்ட போதைப்பொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட $26,000 என்று கணக்கிடப்படுகிறது.
பிடோக், காலாங், தெம்பனிஸ் உள்ளிட்ட சிங்கப்பூரின் பல பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனைகளை நடத்தினார்கள்.
இதனிடையே, அந்தச் சோதனை களுக்குத் தலைமை தாங்கிய தளபத்திய அதிகாரியான சூப்பிரடெண்டன்ட் லீ பின் ஹாவ், சிங்கப்பூர் சமூகத்தில் போதைப்பொருளுக்கு இடமே கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.
போதைப்பொருள் தனிப்பட்டவர்களையும் குடும்பங்களையும் சமூகங்களையும் நாசப்படுத்திவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருளைப் பயன்படுத்துவோர் தங்களுக்கும் தங்களைச் சுற்றி இருப்போருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று அவர் விளக்கினார்.

