லிட்டில் இந்தியாவில் ஓர் உணவகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஒரே ஓர் ஊழியர்தான் 10 மேசைகளுக்குச் சேவையாற்றினார். ஒரு காசாளர்தான் கடையில் இருந்தார்.
வாடிக்கையாளர்களுக்கும் உணவு எடுத்துச் செல்லவரும் மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கும் அவர்தான் சேவையாற்றினார். சமையல் அறையில் நான்கு சமையல்காரர்கள் பரபரப்பாக, சுறுசுறுப்பாக வேலை பார்த்தனர்.
காசாளரிடம் பேச்சுக் கொடுத்தபோது, வாடிக்கையாளர்களுக்கு சேவை யாற்றும் ஊழியர்களை, சமையல்காரர்கள் பற்றாக்குறை காரணமாக சமையல் அறைக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டதாகத் தெரியவந்தது.
சில சமையல்காரர்கள் சிங்கப்பூரை விட்டுப் போய்விட்டனர். சமையல் வேலைக்கு வெளிநாட்டினரை அமர்த்து வது சிரமமானதாக உள்ளது. உள்ளூர் ஊழியர்கள் பற்றி சொல்ல வேண்டிய தில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் வகையில் வெளிநாட்டு ஊழியர் கொள்கையில் மாற்றம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு நிறுவனங்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய பிரச்சினை.
சேவைத் துறை, உற்பத்தித் துறைநிறுவனங்கள், இந்தியா, பிலிப்பீன்ஸ் போன்ற வழக்கமற்ற நாடுகளில் இருந்து ஒரு புதிய பட்டியலில் இடம்பெறும் குறிப்பிட்ட வேலைகளுக்கு 2023 செப்டம்பர் முதல் ஒர்க் பர்மிட்டில் ஊழியரை வேலையில் அமர்த்தலாம் என்று நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.
தங்கள் துறைகளில் வேலை பார்க்க குறிப்பிட்ட நாடுகளில் இருந்துதான் ஒர்க் பரிமிட் ஊழியர்களை வேலையில் அமர்த்த முடியும் என்ற ஒரு நிபந்தனை காரணமாக எஸ் பாஸ் என்ற அனுமதியின் பேரில் சாதாரண நிலை ஊழியர்களை வேலையில் அமர்த்தி உள்ள நிறுவனங்களுக்கு அந்த அறிவிப்பு உதவும்.
சேவைத்துறை, உற்பத்தித்துறையைப் பொறுத்தவரை, மலேசியா, சீனா, தென்கொரியா, ஹாங்காங், மக்காவ், தைவான் ஆகிய வழிவழியான இடங்களில் இருந்துதான் ஒர்க் பர்மிட்டில் ஊழியர்களைச் சேர்க்க முடியும். புதிதாக நடைமுறைக்கு வர இருக்கின்ற ஏற்பாடு, முக்கியமாக உற்பத்தித்துறை, உணவு பதனீட்டுத் துறை ஊழியர்கள், இந்திய உணவகங்களில் சமையல் வல்லுநர்கள் ஆகியோரை வேலையில் அமர்த்த வகை செய்யும்.
ஆனால் இந்தப் புதிய ஏற்பாடு அடுத்த ஆண்டில்தான் தொடங்கும் என்பதே பிரச்சினையாக உள்ளது.
இவ்வேளையில், பல்வேறு காரணங்களால் தேர்ச்சி உள்ள வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிலேயே வேலை பார்க்க விரும்பும் போக்கு அதிகமாகி வருகிறது என்று சிங்கப்பூர் உற்பத்தித்துறை கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் சொல்கிறார்கள்.
எஸ் பாஸ் குறைந்தபட்ச சம்பளம் கூடி இருப்பதால், அது தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அத்தகைய அனுமதியில் வெளிநாட்டினரை வேலையில் அமர்த்துவது இப்போது இருப்பதைவிட இன்னும் சவாலானதாக இருக்கும் என்கிறார் இந்தக் கூட்டமைப்பின் தலைவர் லெனன் டான்.
வழிவழியான நாடுகளில் இருந்து சில தொழில்துறைகளுக்கு ஊழியர்கள் கிடைக்கவில்லை என்று ஃபிளக்ஸ்மெக் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டான் ரு-டிங் கூறுகிறார்.
சிங்கப்பூர், தொற்றிலிருந்து மீட்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் மனிதவளத்துடன் இருந்தால்தான் அவை வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தொற்றுக் காலத்தில் எல்லாம் முடங்கிவிட்டதால் இப்போது தேவைகள் கிடுகிடுவென கூடி வருகின்றன. தொழில் நடத்துவதில் அதிக நம்பிக்கை ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலியாக இருந்த இடங்களை முதலாளிகள் நிரப்புகிறார்கள்.
ஊழியர் சேர்ப்பு முயற்சிகளை நிறுவனங்கள் வேகப்படுத்தி வருகின்றன. என்றாலும்கூட சில வேலைகளில் தேர்ச்சி உள்ள ஊழியர்களைச் சேர்ப்பது கடினமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
அத்தகைய ஊழியர்கள் இல்லாமல் எவ்வளவுதான் முயன்றாலும் நிறுவனங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாது. புதிய ஏற்பாட்டிற்கு 2023 செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும் என்பது பல நிறு வனங்களைப் பொறுத்தவரை தாக்குப் பிடிக்க இயலாத ஒன்றாகவே இருக்கும்.
ஆகையால், வழக்கமற்ற நாடுகளில் இருந்து ஒர்க் பர்மிட்டில் ஊழியர்களைச் சேர்க்க அனுமதிக்கும் அந்தப் புதிய திட்டத்தை முன்னதாகவே செயல்படுத்தும்படி ஏற்கெனவே பலரும் குரல் கொடுத்து இருக்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் பொருளியல் சூடுபிடிக்கிறது. அதற்கேற்ப பொருள், சேவைகளுக்கான தேவை கூடுகிறது. ஆகையால், அந்தத் திட்டத்தை முன்னதாகவே நிறைவேற்றினால் அது பெரிதும் பாராட்டக்கூடியதாக இருக்கும் என்று சிங்கப்பூர் உற்பத்தித் துறை கூட்டமைப்பின் தலைவர் திரு டான் கூறினார்.
உற்பத்தித் துறையில் இயந்திர வல்லுநர்கள், சாதனப் பராமரிப்பு ஊழியர்கள் போன்ற முக்கியமான வேலைகளுக்கும் அந்தப் பட்டியலை நீட்டிக்கலாம் என்று ஃபிளக்ஸ்மெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குறிப்பிட்டார்.
பட்டியலில் இடம்பெற பொருத்தமான வேலைகளைப் பற்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைப்புகளுடன் தொடர்ந்து தான் செயல்படப் போவதாக மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பருக்கு முன்பே மேலும் பல வேலைகள் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படும் என்று நம்பப்படுகிறது.
மனிதவளப் பிரச்சினை தொடர் பிரச் சினையாகவே இருந்து வருகிறது. வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்து இருப்பதை சிங்கப்பூர் குறைத்துக்கொள்ள வேண்டும்; இதற்காக அது உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்ற கருத்து இப்போது பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது.
வலுவான உள்ளூர் ஊழியர் அணி உருவாக அரசாங்கம் பல்வேறு செயல்திட்டங்கள் மூலம் ஆதரவு அளித்து வருகிறது. இருந்தாலும் தொற்று காரணமாக கைநழுவிப் போய்விட்ட இழப்புகளைச் சரிகட்ட முயன்று வரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை உடனடியாக தீர்வு காணவேண்டிய ஒரு பிரச்சினையை அவை எதிர்நோக்குகின்றன.
வழக்கமற்ற நாடுகளில் இருந்து ஊழியர்களை வேலையில் சேர்ப்பதற்கான அனுமதியும் அத்தகைய ஊழியர்களை மேலும் பல வேலைகளில் சேர்ப்பதற்கான விரிவான பட்டியலும் இருக்குமானால் அது அத்தகைய நிறுவனங்களுக்கு பெரிதும் தேவைப்படும் நிவாரணமாகும்.

