மாதங்கி இளங்கோவன்
கலப்பு தற்காப்புக் கலையில் ஈடுபடும் அமீர் கானும் பன்பயாக் ஜித்முவாக்னொனும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடற்பயிற்சி கலந்த தற்காப்புக் கலை பயிலரங்கை நேற்று நடத்தினர்.
'ஒன் சாம்பியன்ஷிப்' ஏற்பாட்டில் நடந்தேறிய அப்பயிலரங்கில் வெளிநாட்டு ஊழியர்கள் ஒரு மணி நேரத்திற்கு கலப்பு தற்காப்புக் கலையின் அடிப்படை அம்சங்கள் கொண்ட உடற்பயிற்சியைச் செய்தனர். உடலுக்கு வலிமை சேர்த்ததோடு திறமைவாய்ந்த பிரபலங்களுடன் பழகும் வாய்ப்பையும் அதன் மூலம் அவர்கள் பெற்றனர்.
லியோ தங்குவிடுதியிலுள்ள ஏறத்தாழ 40 வெளிநாட்டு ஊழியர்கள் ஒன்றுகூடி அந்த விடுதியில் இருக்கும் ஓர் அறையில் உடற்பயிற்சி களில் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஊக்கத்தோடும் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரில் கடந்த 22 ஆண்டு களாக பணிபுரியும் பத்மநாபன், நேற்றைய பயிலரங்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்ததாகவும் மற்ற ஊழியர்களோடு சேர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டது புத்துணர்ச்சியைத் தந்ததாகவும் கூறினார்.
"நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதை நானும் மற்ற ஊழியர்களும் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.
"கலப்பு தற்காப்புக் கலைகளில் வல்லுநர்களாக இருப்பவர்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தது உடற்பயிற்சியில் ஈடுபட அதிக ஊக்கம் தந்துள்ளது," என்றார் பத்மநாபன்.
'கிக் பாக்சிங்', 'முவாய் தாய்' போன்ற தற்காப்புக் கலைகளில் அனுபவம் கொண்ட அமீர் கான், தற்காப்புக் கலைகளை வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது மனநிறைவை பெறுவதாகக் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்கள் கற்றுக்கொள்ள தோதாக ஏற்ற வேகத்தில் உடற்பயிற்சியையும் கலப்பு தற்காப்புக் கலை நுணுக்கங்களையும் கற்றுக்கொடுக்க முயன்றேன்," என்றாரவர்.
லியோ தங்குவிடுதியின் மேலா ளரான பாவா சாஹிபு, ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் மனதிற்கொண்டுதான் கலப்பு தற்காப்புக் கலைகள் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தார்.
"இந்தப் பயிலரங்கு மட்டுமல்லாமல் ஊழியர்களை மகிழ்விக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடுகிறோம். உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும் இந்நடவடிக்கைகளில் ஈடுபட நமது ஊழியர்கள் நிச்சயம் ஆவலுடன் உள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.

