நியூயார்க்கில் அமெரிக்க, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்தனர். அதனைஅடுத்து அந்த இரு நாட்டு உறவில் தமக்கு கொஞ்சம் நம்பிக்கை பிறந்து இருப்பதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் சனிக்கிழமை டாக்டர் விவியன் உரையாற்றினார். அதற்குப் பிறகு அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசினார்.
"தைவான் நீரிணையில் அண்மைய வாரங்களில் இடம்பெற்ற செயல்கள் கவலை தருபவையாக இருந்தன.
"அதீத கவலை என்றுகூட நான் சொல்வேன்," என்றார் அவர். ஆனால், அந்த இரு நாடுகளின் அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
"சூழ்நிலையின் ஆழத்தை இரண்டு தரப்புகளும் புரிந்துகொண்டு இருப்பதாக நான் நினைக்கிறேன்.
"இதன் அடிப்படையில் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது," என்று டாக்டர் விவியன் தெரிவித்தார்.
அமெரிக்காவும் சீனாவும் தப்புக் கணக்குகளைத் தவிர்த்துக்கொண்டு செயல்படும். நல்ல எண்ணம் நிலவும் என்பதே தமது நம்பிக்கை என்றாரவர்.
இருந்தாலும் "நம்பிக்கைதான் நான் தெரிவித்து இருக்கிறேன். நடக்கபோவதை நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்றார் டாக்டர் விவியன்.
அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்கள் மிக முக்கிய காலகட்டமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
"வரும் மாதங்களில் சூழ்நிலை மேம்பட வேண்டும். இரண்டு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறையவேண்டும். உச்ச மாநாடுகள் நடக்கவிருக்கின்றன. அவை இரண்டு தரப்புகளும் சந்தித்து பேச வாய்ப்புகளை வழங்கும்," என்றும் டாக்டர் விவியன் கூறினார்.
"சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் நேருக்கு நேர் சந்திப்பார்கள். ஏதோ ஒரு வகை ஏற்பாட்டுக்கு வருவார்கள்.
"அந்த ஏற்பாட்டைப் பின்பற்றி அதிகாரிகளும் அமைச்சர்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஆக்ககரமான பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும் என்பது எனது நம்பிக்கையாக இருக்கிறது," என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உக்ரேன் போர், உணவு, எரிசக்தி விலை உயர்வு, அமெரிக்க-சீன உறவு, பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பல பிரச்சினைகள் காரணமாக 77வது ஐநா பொதுச் சபை கூட்டமும் அது தொடர்பான இதர கூட்டங்களும் மந்தமாகவே இருந்தன என்று அமைச்சர் சிங்கப்பூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.
உக்ரேன் பிரச்சினை தொடர்பில் ரஷ்யாவும் ஐரோப்பாவும் பிளவுபட்டு மிகவும் விலகி இருக்கின்றன என்பதை அவர் சுட்டினார்.
உக்ரேனில் தனது ராணுவத்தைப் பலப்படுத்த சேமப் படையினரை ரஷ்யா திரட்டுவது ஒரு கெட்ட அறிகுறி என்றும் டாக்டர் விவியன் கூறினார்.
ஐநாவில் ஐந்து நாள்களில் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், தலைவர்களை தான் சந்தித்ததாக வும் டாக்டர் விவியன் தெரிவித்தார்.