தந்தையின் தொழிலில் தோல்வி ஏற்பட்டது, அதே ஆண்டில் அவர் விபத்துக்குள்ளாகி வேலைக்குச் செல்லாதது என பார்த்திபன் சர்ச்சில் குடும்பத்தின் நிதிநிலைமை மோசமடைந்தது. அந்த ஆண்டு தேசிய கல்விக் கழகத்தில் இருந்த அவரால் தொடர்ந்து பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை.
அப்போது அவர் நிரந்தரவாசி என்பதால் கல்வி அமைச்சின் நிதியுதவித் திட்டங்களுக்கும் அவர் தகுதிபெறவில்லை.
இச்சூழலில் வேறு வழியின்றி படிப்பை நிறுத்தினார். பிறகு சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையில் தன் தேசிய சேவையை முடித்தார். தற்காப்பு அமைச்சின் ஒரு பிரிவின் தளபதியாகச் சேர விருப்பப்பட்டபோதும் குறைந்தது ஒரு நைட்டெக் சான்றிதழ் தகுதி தேவைப்பட்டது. அந்த ஆசையும் ஈடேறாமல் போனது.
தன்னுடைய குடியுரிமையைப் பெற்ற பிறகு 2020ஆம் ஆண்டில் சிண்டாவின் உதவியுடன் விமான இயந்திரவியல் தொழில்நுட்பத் துறையில் தன் நைட்டெக் கல்வியைத் தொடர்ந்தார் பார்த்திபன்.
"தேசிய கல்விக் கழகத்தில் 5,000 வெள்ளிக்கும் அதிகமான எனது பள்ளிக் கடனைச் செலுத்த சிண்டா உதவியது. என் படிப்பு முடியும்வரை சிண்டா வழங்கிய நிதியுதவி எனக்குப் பெரிதும் கைகொடுத்தது," என்றார் அவர்.
தேசிய கல்விக் கழகத்தில் உன்னதத் தேர்ச்சி பெற்ற இவர், தற்சமயம் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இயந்திரப் பொறியியல் துறையில் படித்து வருகிறார். 'சிறந்த பட்டதாரி விருது' உள்ளிட்ட பல்வேறு விருது களை பெற்றுள்ள 27 வயது பார்த் திபன், வாழ்க்கையில் எதிர்பாராத சோதனைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு கல்வியைத் தொடர்வது நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

