இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாரா பீவி, தன் கனவை நோக்கிய பயணத்திற்கு வயது ஒரு தடையல்ல என்கிறார்.
தொழில்நுட்பக் கல்விக் கழகம் நைட்டெக் பிரிவில் உன்னத விருதினைப் பெற்றிருக்கும் இவர், தனது 40வது வயதிற்குப் பின்னர் இடைக்கால பணிமாற்றம் செய்யத் துணிந்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூத்த சில்லறை வர்த்தக உதவியாளராகப் பணிபுரிந்து, 2020ஆம் ஆண்டில் தாதியாகும் கனவில் அத்துறையில் பயிலத் தொடங்கினார். சக மாணவர்கள் தன்னைவிட 20 வயது குறைந்தவர்களாக இருந்தது ஆரம்பத்தில் தனக்குள் சற்று தயக்கத்தை ஏற்படுத்திய தாகவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு படிப்பதும் தேர்வு எழுதுவதும் மிகவும் சிரமமாக இருந்ததாகவும் கூறினார்.
உறுதியுடன் தொடர்ந்த இவருக்கு, பெற்றோரும் பிள்ளைகளும் மிகுந்த ஆதரவு அளித்தனர். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறிது காலத்திலேயே படிக்கவும் வகுப்
பறைச் சூழலில் இருக்கவும் பழகிக்கொண்டார். சக மாணவர்களும் ஆசிரியர்களும் தன் கனவை அறிந்து ஒத்துழைத்ததாகவும் கூறினார் சாரா.
தொற்று காலத்தில் பிள்ளைகள் மட்டுமன்றி தனக்கும் இணையம்வழி பாடங்கள் நடந்தது சவால்மிக்கதாக இருந்தபோதும் பிள்ளைகளுடன் சேர்ந்து படித்த நாள்கள், அவர்களுக்குள் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தியதாக நினைவுகூர்ந்தார்.
தற்சமயம் தேசிய பல்கலைக்
கழக மருத்துவமனையில் முழுநேர தாதியாகப் பணிபுரியும் இவர், இந்தப் பணி தனக்கு மிகுந்த மன
நிறைவை அளிப்பதாகக் கூறினார். சூழ்நிலையைக் காரணம் காட்டி கனவைக் கைவிடாமல் உறுதியுடன் தொடரவேண்டும் என்று அறிவுறுத்த விரும்புகிறார் சாரா.

