எரிசக்தி விலை இவ்வாண்டு உலகளாவிய நிலையில் உயர்ந்துள்ளபோதிலும் அடுத்த ஆண்டு அவை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி விலை தொடர்ந்து அதிகமாக இருப்பதால் அவற்றுக்கான தேவை மேலும் சரியக்
கூடும் என்று நேற்று தொடங்கிய ஆசிய பசிபிக் எரிபொருள் மாநாட்டில் எஸ் அண்ட் பி குளோபல் கொமோடிட்டி இன்சைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு சௌகாட்டா சாஹா கருத்து தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டில் கொவிட்-19 நெருக்கடிநிலை தலைதூக்கிய
திலிருந்து முதல்முறையாக எரிபொருள் வர்த்தகர்கள், சுத்திகரிப்பாளர்கள், வங்கி அதிகாரிகள், பகுப்பாய்வாளர்கள் போன்றவர்களை மாநாடு வரவேற்றது.
"உக்ரேன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிசக்தி, நிலக்கரி, மின்சாரம் முதலியவற்றின் விலைகள் ஏற்றம் கண்டுள்ளன.
"விலை நிலையற்றதன்மை, விநியோக இடையூறுகள், வர்த்தகப் பாதிப்பு, தேவைகளின் சரிவு ஆகியவை இவ்வாண்டு உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் புதிய மாற்றங்கள்," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் திரு சாஹா தெரிவித்தார்.
மாநாட்டின் சிறப்பு விருந்தினராக வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங்
கலந்துகொண்டார்.
உலக வங்கி முன்வைத்துள்ள பருவநிலை தொடர்பான திட்டத்தை நடத்த சிங்கப்பூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும் என்றும் திருவாட்டி லோ கூறினார்.

