லாவோஸ் பிரதமர் ஃபான்காம் விஃபாவான் சிங்கப்பூருக்கு இன்றும் நாளையும் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.
லாவோசின் பிரதமராக இதுவே அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணம். பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பை ஏற்று அவர் சிங்கப்பூருக்கு வருகிறார்.
அவருடன் அவரது மனைவி, அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள் ஆகியோர் வருவதாக வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.
திரு ஃபால்காமுக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். அதையடுத்து, அவர் அதிபர் ஹலிமா யாக்கோப்பையும் பிரதமர் லீயையும் நாளை சந்தித்துப் பேச இருக்கிறார். திரு ஃபான்காமுக்குப் பிரதமர் லீ மதிய உணவு விருந்துபரசிப்பு அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கிடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் நிகழ்வில் பிரதமர் லீயும் திரு ஃபான்காமும் கலந்துகொள்வர்.
இருநாடுகளின் வெளியுறவு அமைச்சுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் தளம் இந்த ஒப்பந்தங்களால் நிறுவப்படும் என்றும் எரிசக்தி, சுற்றுப்புற, மின்னிலக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மூத்த அமைச்சரும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்னத்தையும் திரு ஃபான்காம் சந்தித்துப் பேசுவார்.
லாவோஸ் பிரதமரையும் அவரது மனைவியையும் கௌரவிக்கும் வகையில் புதிய வகை ஆர்க்கிட் மலருக்கு அவர்களது பெயர்கள் சூட்டப்படும்.

