மாதங்கி இளங்கோவன்
சிறு வயது முதல் கல்விக் காலம் முழுதும் கணக்குப் பாடத்தில் தேர்ச்சியே பெறாத 29 வயது மாணிக்கம் நாச்சியப்பன் (படம்), இன்று நிலப் போக்குவரத்து ஆணையத்தில் பொறியாளராக தரவு அறிவியல் குழுவில் அங்கம் வகிக்கிறார்.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் செயல்முறை பொறி
யியல் பாடத்தைக் கற்று பட்டம்பெற்ற மாணிக்கத்தின் கல்விப் பயணம் எளிதாக இருந்ததில்லை. கணக்குப் பாடம் அவருக்குச் சவாலானது என்றாலும் அவருக்குக் கற்பித்த விரிவுரையாளர்களின் உந்துதலால் அவரது விருப்பப் பாடமாகவே அது அமைந்தது. கணக்கில் ஏற்பட்ட ஆர்வமும் குறியீட்டு முறை மொழிகளின்பால் ஏற்பட்ட ஈடுபாடும் அவரது பட்டப்
படிப்பில் தேர்ச்சியடைய உதவியது.
பல்கலைக்கழகக் கல்விக் காலத்தில் இவருக்கு நிலப் போக்கு வரத்து ஆணையத்தில் பணிபுரிய வாய்ப்பு கிட்டியது.
மொத்தம் எட்டு மாதங்
களுக்கு அங்கு பணிபுரிந்த மாணிக்கத்திற்கு 'இண்டர்னெட் ஆஃப் திங்ஸ்' எனும் இணையக் கருப்பொருளை உள்ளடக்கிய அறிவார்ந்த அலுவலக முறையைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைத்தது.
மேலும், 'பைத்தன்', 'ரெஸ்பெரி பை', 'டார்ட்' ஆகிய குறியீட்டு முறை மொழிகளைக் கற்றுக்கொண்டு உண்மையான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கு இவ்வேலை வாய்ப்பு அதிகம் உதவியுள்ளதாகவும் பகிர்ந்துகொண்டார்.
தொழில்நுட்பத் திறனோடு மாணிக்கத்திற்கு இந்த வேலைவாய்ப்பு, படைப்பாற்றலையும் பிரச் சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை வளர்க்கவும் ஆழ்ந்த சிந்தனைக்கும் வழிவகுத்துள்ளது.
வழக்கநிலைத் தேர்வுக்குப் பின் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் மின்னணுவியல், கணினிக் கட்டமைப்பு, தொடர்புப் பாடத்தைப் பயின்றார் மாணிக்கம். உயர்நிலைப்
பள்ளியில் சிறந்த தேர்ச்சி பெற
முடியாத சூழலால் தமது பெற்றோருக்கு மனவருத்தமே எஞ்சியதாகத் தெரிவித்தார் அவர்.
விடாமுயற்சியாலும் அயராத உழைப்பாலும் 3.85 புள்ளிகளுடன் நேரடியாக நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இடம்பிடித்தார்.
பலதுறை தொழிற்கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் அவர் பயின்ற காலகட்டத்தில் அவருக்கு மெல்ல மெல்ல குறியீட்டு முறையில் ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியது.
பல விதமான குறியீட்டு முறை மொழிகளை அவர் தாமாகவே பாட நேரங்களுக்கு அப்பால் கற்றுக்கொண்டார்.
வீட்டிற்குள் அந்நியர்களோ பயங்கரவாதிகளோ நுழைய முயன்றால் தம் குடும்பத்தாரை எச்சரிக்கும் மணியொன்றை உருவாக்குவது போன்ற சில எளிய ஆனால் முக்கிய கருவிகளைத் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டார் மாணிக்கம்.
தினமும் பரபரப்பான சூழலில் பணிபுரியும் அவர் மக்களின் அன்றாட பொதுப்போக்குவரத்து பயணங்களை எவ்வாறு சுமுகமாக மாற்றியமைப்பது என்பதற்காக தேவையான தரவுகளைச் சேகரித்து ஆராயும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
தமது 14வது வயதில் பெற்றோருடனும் சகோதரியுடனும் தூத்துக்குடியிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இவர், தமது பூர்வீகத்தின் தனித்துவமான பாரம்பரிய உணவை சமைத்து விநியோகம் செய்தார்.
சில காலமே உணவு வியாபாரம் செய்தாலும் இவரது சமையல் இன்னும் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாக உள்ளது.
எனவே, எதிர்காலத்தில் உணவுத் துறையில் ஈடுபடும் எண்ணமும் இவருக்கு உள்ளது.
பிற்காலத்தில், மாணிக்கம் இன்னும் பல பொறியியல் திட்டங்களைத் தலைமையேற்று வழிநடத்தவும் தாம் கற்ற பாடங்களை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறார்.