மின்னணுத் துறை உற்பத்தி தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் வீழ்ச்சியடைந்ததால் சிங்கப்பூரின் மொத்த உற்பத்தி ஆகஸ்ட் மாதம் மேலும் வீழ்ச்சியடைந்தது.
உலக அளவில் பணவீக்க உயர்வு, கடன் வட்டி விகித உயர்வு போன்றவற்றால் பயனீட்டாளர் தேவை குறைந்து வருகிறது.
இந்நிலையில், மின்னணுத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி ஏற்றுமதியை நம்பியிருக்கும் சிங்கப்பூர் பொருளியலின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் தொழிற்துறை உற்பத்தியில் மின்னணுத் துறையின் பங்கு 40% என்பது இங்கு நினைவுகூரத்தக்கது என ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.
ஆண்டுக்காண்டு அடிப்படையில் சிங்கப்பூரின் மொத்த உற்பத்தி ஆகஸ்ட் மாதம் 0.5% வளர்ச்சி கண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுவே ஜூலை மாதம் சரிசெய்யப்பட்ட உற்பத்தி வளர்ச்சி 0.8%ஆக இருந்ததாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஆகஸ்ட் மாத உற்பத்தி வளர்ச்சி 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின் ஏற்பட்டுள்ள ஆகக் குறைவான வளர்ச்சி விகிதம் என்று கழகம் தெரிவித்தது.
உயிர்மருத்துவத் துறைத் தவிர்த்துப் பார்த்தால், உற்பத்தி 1.2% வீழ்ச்சி கண்டதாக கழகம் கூறியது.
எனினும், ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் புளூம்பெர்க் தனது கணிப்பில் தெரிவித்த 0.7 விழுக்காட்டைவிட நன்றாக இருந்ததாக கூறப்படுகிறது.
முக்கிய மின்னணுத் துறையின் உற்பத்தி ஜூலை மாதம் 5.9 விழுக்காடு வீழ்ச்சி கண்ட நிலையில், ஆகஸ்ட் மாத வீழ்ச்சி 7.8 விழுக்காடு என அதிகரித்தது.
பயனீட்டாளர்களிடையே தேவை குறைந்ததன் காரணமாக மின்னணுத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் உற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டது.
இதில் மின்னணு சாதனப் பிரிவுகளில் அந்தச் சாதனங்களுக்கு தேவையான உபகரணங்கள் பிரிவிலும் 19.3 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது.
தகவல் தொழில்நுட்பம், பயனீட்டாளர் மின்னணுச் சாதனங்களின் உற்பத்தி 11.7 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.
இதற்கு அடுத்த நிலையில், மூன்றாவது மாதமாக பகுதி மின்கடத்திகளின் உற்பத்தி 6.6% வீழ்ச்சியடைந்தது. இதில் கணினி உபகரணங்கள், தகவல் சேமிப்புத் துறைகளின் உற்பத்தி 5.5% வீழ்ச்சியடைந்தது.
பகுதி மின்கடத்திகளுக்கு தேவை இவ்வாண்டு வெகுவாகக் குறையும் என்றும் இந்த நிலைமை அடுத்த ஆண்டும் தொடரக்கூடும் என்றும் மைக்ரான், இன்டெல், நிவிடியா போன்ற நிறவனங்கள் முன்னுரைத்துள்ளன. இந்நிலையில், உலக அளவில் இந்தத் துறை கடும் வீழ்ச்சி காணும் என்ற கவலை எழுந்துள்ளது.
ரசாயனத் துறையில் 11.2% வீழ்ச்சி ஏற்பட்டது. இதில் சிறப்பு ரசாயனத் துறை 14 % வீழ்ச்சியடைந்தது.
இவை இப்படியிருக்க, உலக அளவில் விமானப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் விமான எரிபொருளுக்கான தேவை அதிகரித்தது. அந்தத் துறை 8.1% வளர்ச்சி அடைந்ததாக கழகம் விளக்கியது.
சிங்கப்பூரின் ஏற்றுமதியில் 15% இருக்கும் மின்னணு, ரசாயனத் துறைப் பொருள்கள், உலக அளவிலும், குறிப்பாக சீனாவிலும், இவற்றுக்கான தேவை குறைந்து உள்ளதால், இந்தத் துறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக கழகம் தெரிவித்துள்ளது.

