மின்சிகரெட்டுகளை விற்பனை செய்ததற்காக 17 பேருக்கு $114,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஐவருக்குக் கூடுதலாக சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து $170,000க்குமேல் மதிப்புடைய மின்சிகரெட்டுகளும் அவை தொடர்பான கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று தெரிவித்தது. இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்களிலும் மின்வர்த்தகத் தளங்களிலும் விற்கப்பட்டன.
அந்த 17 பேருடைய வயது 20க்கும் 39க்கும் இடைப்பட்டவை.
மின்சிகரெட்டுகள், அவை தொடர்பான சாதனங்களை விற்றதற்காக 2018லிருந்து குறைந்தது 70 பேருக்கு எதிராக ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. தான் விதித்துள்ள ஆகப்பெரிய அபராதத் தொகை $99,000 என்று ஆணையம் கூறியது.
மின்சிகரெட்டுகளை வாங்குவதோ, வைத்திருப்பதோ, பயன்படுத்துவதோ குற்றமாகும்.
2018 பிப்ரவரிக்கும் கடந்த ஆண்டு டிசம்பருக்கும் இடையே இதற்காக 6,842 பேர் பிடிபட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையம் கூறியது.
பிடிபடுபவர்களுக்கு ஒவ்வொரு குற்றத்துக்கும் $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

