குடிமக்களில் 18.4 விழுக்காட்டினர் 65 வயது, அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களாவர்
சிங்கப்பூர் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருகிறது. 65 வயது, அதற்கும் மேற்பட்ட வயதுடைய குடிமக்களின் விகிதம் இவ்வாண்டு 18.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
2012ல் இந்த விகிதம் 11.1 விழுக்காடாக இருந்ததாக நேற்று வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்தது. கடந்த ஆண்டு இந்த விகிதம் 17.6 விழுக்காடாக இருந்தது.
2030க்குள் குடிமக்களில் கிட்டத்தட்ட நால்வரில் ஒருவர், அல்லது 23.8 விழுக்காட்டினர் 65 வயது, அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பர்.
கடந்த ஆண்டு ஜூனுக்கும் இவ்வாண்டு ஜூனுக்கும் இடையே குடிமக்கள் மக்கள்தொகையில் இடைநிலை வயது 42.5லிருந்து 42.8ஆகக் கூடியது.
இதற்கிடையே 80 வயது, அதற்கும் மேற்பட்ட வயதுடைய குடிமக்களின் எண்ணிக்கை, 2012லிருந்து 70 விழுக்காட்டிற்குமேல் அதிகரித்து இவ்வாண்டு 132,000 ஆனது. மக்கள்தொகையில் இந்த விகிதம் 3.7 விழுக்காடாகும்.
ஜப்பான், தென்கொரியா போன்ற மற்ற ஆசிய நாடுகளிலும் மக்கள்தொகை மூப்படைந்துவரும் போக்கு காணப்படுகிறது. அந்த நாடுகளில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
2020ல் சிங்கப்பூர் மக்கள்தொகையில் 65 வயது, அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களின் விகிதம் 17 விழுக்காடாக இருந்தது.
தென்கொரியாவில் இந்த விகிதம் 16 விழுக்காடாகவும் ஜப்பானில் இது 29 விழுக்காடாகவும் இருந்தது.
மக்கள்தொகையை தனது முக்கிய வளமாகக் கொண்டிருக்கும் சிறிய நாடான சிங்கப்பூரில் மக்கள்தொகை மூப்படைந்து வருவதும் இதனால் ஏற்படும் விளைவுகளும் சிங்கப்பூரை இன்னும் தீவிரமாக பாதிக்கும் என்று மக்கள்தொகை அறிக்கை குறிப்பிட்டது.
இந்த முக்கிய சவாலைச் சமாளிக்க, திருமணத்தையும் பெற்றோர் பருவத்தையும் சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று அறிக்கை கூறியது.
குடும்பங்களைத் தொடங்கி அவற்றைப் பேணி வளர்ப்பதில் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கும் அதேவேளையில், குடும்பங்களுக்கு உகந்த வலுவான கட்டமைப்பை உருவாக்க முதலாளிகள், சமூகப் பங்காளிகள், தனிமனிதர்கள் என அனைவரும் தங்கள் பங்கை ஆற்றலாம் என்று அறிக்கை சொன்னது.
மூத்தோர் தன்னம்பிக்கையுடனும் நிம்மதியுடனும் அர்த்தமுள்ள வகையில் மூப்படைவதற்கான ஓர் இல்லமாகவும் சிங்கப்பூர் விளங்க வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
குடிமக்கள் தங்கள் சுகாதாரத்தைக் கவனித்துக்கொண்டு ஆரோக்கியத்துடன் நீடித்து வாழ சிங்கப்பூர் முன்னெடுத்துவரும் முயற்சிகளை மக்கள்தொகை அறிக்கை சுட்டியது. 'வெற்றிகரமாக மூப்படைவதற்கான செயல்திட்டமும்' அடுத்த ஆண்டு தொடங்கப்படவுள்ள 'மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி திட்டமும்' இவற்றில் அடங்கும்.
மக்கள்தொகை மூப்படைவதாலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாலும் ஏற்படும் தாக்கத்தை மட்டுப்படுத்த குடிநுழைவு உதவுவதாக அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு 21,537 பேருக்கு குடியுரிமையும் 33,435 பேருக்கு நிரந்தரவாசத் தகுதியும் வழங்கப்பட்டன.