வேலையிட விபத்தில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஊழியர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட 'சினர்ஜி-பிஸ்' எனும் நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதற்காக அந்நிறுவனத்துக்கு $6,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த ஊழியர் மரணம் அடைந்ததற்கு அடுத்த நாள் அந்த நிறுவன வளாகத்தில் மனிதவள அமைச்சு சோதனை நடத்தியது. இதில், ஊழியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பற்ற சூழல் நிலவியது கண்டறியப்பட்டது.
'சினர்ஜி-பிஸ்' நிறுவனத்துக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பாதுகாப்புக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்வரை பணி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் அது நிறுத்திவைக்க வேண்டும்.
முன்னதாக, பளுதூக்கும் வாகனம் ஏறியதில் அந்நிறுவனத்தின் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். பளுதூக்கும் வாகனத்தை வேறோர் இடத்துக்குக் கொண்டுசெல்ல அதை லாரியில் அவர் ஏற்றிக்கொண்டு இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
ஊழியர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாதுகாப்புக் குறைபாடுகள் பலவற்றும் எளிதில் சரிசெய்யப்பட்டிருக்கலாம் என்பது சோதனையில் கண்டறியப்பட்டதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார்.
"நிறுவன நிர்வாகமும் ஊழியர்களும் பாதுகாப்பை முக்கியமாக எடுத்துக்கொள்வது அவசியம். இதன் தொடர்பில் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நாங்கள், பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்படும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்றார் அவர்.
'ஸ்டார்ட்சேஃப்' திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கு அமைச்சு ஆதரவளிக்கும் என்று திரு ஸாக்கி கூறினார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வேலையிடப் பாதுகாப்பையும் சுகாதார இடர்களையும் அடையாளம் கண்டு, சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்த இத்திட்டம் உதவுகிறது.
"சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான ஸ்டார்ட்சேஃப் முயற்சிகளுக்கு நாங்கள் கட்டணக் கழிவு வழங்குவோம். பாதுகாப்பு முயற்சிகளில் எந்தவொரு நிறுவனமோ ஊழியரோ பின்தங்கிவிடாமல் இருப்பதை இது உறுதிசெய்யும்," என்றார் திரு ஸாக்கி.

