ஒருவர் நோய்வாய்ப்படுவதைத் தவிர்ப்பதற்கு வகைசெய்யும் 'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டத்தை சிங்கப்பூர் அடுத்த ஆண்டு செயல்படுத்தவுள்ளது.
அந்த வகையில் மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றை நடத்துவதையும் தாண்டி சிங்கப்பூரின் மூன்று சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள் பல்வேறு மருத்துவ, சமூக நடவடிக்கைகளின் மூலம் குடியிருப்பாளர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவ உன்னத விருது நிகழ்ச்சியில் திரு ஓங் பேசினார்.
தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், தேசிய பல்கலைக்கழக சுகாதார முறை, சிங்ஹெல்த் ஆகியவை அந்த மூன்று குழுமங்கள்.
தற்போது அவை சமூக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன; ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் அவை மேற்கொள்ளும் முயற்சிகளில் சிறு பங்கையே வகிக்கின்றன.
மக்கள்தொகையின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்கள் கூடுதல் பங்கு வகிக்கும்போது சமூக நடவடிக்கைகள் கணிசமாக அதிகரிக்கும்.
'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டத்தின்கீழ் சுகாதாரப் பராமரிப்பு எவ்வாறு உருமாறும் என்பதை திரு ஓங் விளக்கினார்.
திட்டத்திற்கான வெள்ளை அறிக்கை சென்ற வாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
அது குறித்து இவ்வாண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.
நோய்வாய்ப்பட்ட பிறகு ஒருவரைக் கவனித்துக்கொள்வதற்குப் பதிலாக அவர் நோய்வாய்ப்படுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது 'ஹெல்தியர் எஸ்ஜி' திட்டத்தின் நோக்கம்.
அதற்கு வழிவகுக்க சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களுக்கான நிதி வழங்கும் முறை மாற்றப்படும்.
மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில்கொண்டே தற்போது நிதி வழங்கப்படுகிறது.

