மீண்டும் மீண்டும் குற்றம் புரியும் ஒருவர், மருத்துவரின் அங்கீகாரம் இல்லாமல் 'டைசிபாம்' எனும் மருந்தையும் இருமல் மருந்தையும் உட்கொண்டு விட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதியன்று கிளமெண்டி வட்டாரத்தில் கத்தியுடன் முரட்டுத்தனமாகத் திரிந்தார்.
சூ சியோவ் வீ எனும் அந்த ஆடவர், மற்றொருவரைக் கத்தியால் தாக்கிவிட்டு, கிளமெண்டி காவல்துறை தலைமையகத்துக்குச் சென்றார். அங்கு காவல் காத்துக்கொண்டிருந்த அதிகாரி ஒருவரைத் தாக்க ஓடி வந்தார்.
அப்போது அந்த அதிகாரி தனது சேவைத் துப்பாக்கியால் சூவின் இடது கையில் சுட்டார்.
நேற்று அதன் தொடர்பிலான நீதிமன்ற வழக்கில் குற்றவியல் மிரட்டல் விடுத்ததாகத் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை 50 வயது சூ ஒப்புக்கொண்டார்.
பொதுச் சேவை அதிகாரி ஒருவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததையும் மற்றோர் ஆடவரைக் கத்தியைக் கொண்டு தாக்கியதையும் சூ ஒப்புக்கொண்டார்.
"தனக்குள் ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அது எதிரே வருவோரைத் தாக்குமாறும் சொல்லிக்கொண்டிருந்தது," என்று சூ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அன்றைய தினம் இரவு 8.40 மணிக்கு கிளமெண்டியில் திரிந்துகொண்டிருந்த சூவுக்கு அருகில் 41 வயது வோங் வெய் ஜி வந்தார். அப்போது சூ கத்தியை வெளியில் எடுத்து அவரைத் தாக்க முற்பட்டார். அவரைத் தடுக்க வோங் முயன்றபோது, கத்தி அவரது கையைப் பதம் பார்த்தது.
பின்னர் அவரிடமிருந்து தப்பித்து வோங் அருகில் உள்ள பேரங்காடியை நோக்கி ஓடிவிட்டார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆர். அரவிந்தன் நேற்று கூறினார்.
பிறகு கிளமெண்டி காவல்துறை தலைமையகத்துக்கு வெளியே 20 வயது அதிகாரியைத் தாக்க முற்பட்டபோது அவர் சுடப்பட்டார். தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பிப்ரவரி 25ல் இல்லம் திரும்பினார்.
சீர்திருத்தப் பயிற்சிக்கு சூ தகுதியானவரா என்பதை மதிப்பிடும் அறிக்கைக்கு நீதிபதி உத்தரவிட் டார். சூவுக்கு அடுத்த மாதம் 26ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.