பருவநிலை மாற்றத்தின் விளைவாக சிங்கப்பூரில் விரைவில் பகல்பொழுதுகளில் அதிக வெப்பமும் இரவுவேளைகளில் அதிகக் குளிரும் உணரப்படக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கடுமையான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதால் இவ்வாறு நேரக்கூடும் என்று கருதப்படுகிறது.
இதனை முன்னிட்டு சிங்கப்பூர் ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளுக்கும் வானிலை முன்னுரைப்புத் திறனை வலுப்படுத்துவதற்கும் அதிகமாக முதலீடு செய்துவருவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் நீண்டகாலத் தாக்கத்தைச் சமாளிக்க இது கைகொடுக்கும். வாரியம் சென்ற நிதியாண்டுக்கான அதன் ஒருங்கிணைந்த நீடித்த நிலைத்தன்மை அறிக்கையை நேற்று வெளியிட்டது.
அதில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் ஆக அதிக வெப்பநிலையாக ஏப்ரல் 1ஆம் தேதி, அட்மிரல்டியில் 36.8 டிகிரி செல்சியஸ் பதிவானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1983ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேத் டெங்காவில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இந்த ஆண்டில் இதுவரை, பிப்ரவரி 20ஆம் தேதி இரவு வெப்ப நிலை 20.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இதற்கு முன்னர் 1934ஆம் ஆண்டு ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில், ஆகக் குறைவான வெப்பநிலையாக 19.4 டிகிரி செல்சியஸ் பதிவானது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின், பருவநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கநிலைக் குழு, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்காவிட்டால், 2050ல் சிங்கப்பூரில் மிகக் கடுமையான வெப்ப அலைகளும், பெருவெள்ளமும் ஏற்படும் என்று சென்ற ஆண்டு அறிக்கையில் எச்சரித்திருந்தது.
2100ஆம் ஆண்டு வரையிலான வானிலை முன்னுரைப்புகள் தொடர்பான ஆய்வில் தேசிய சுற்றுப்புற வாரியம் ஈடுபட்டுள்ளது.

