உலக மின்னிலக்கப் போட்டித்தன்மைத் தரவரிசையில் சிங்கப்பூர் நான்காம் இடத்தையும் ஆசிய அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
டென்மார்க், அமெரிக்கா, சுவீடன் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன.
உயர்கல்வியில் மேம்பாடு, ஆய்வு, உருவாக்கத்தில் பணியாற்றும் ஊழியர் விகிதத்தில் அதிகரிப்பு, வெளிநாட்டுத் திறனாளர்கள் ஈர்ப்பிலும் அறிவியல் ஆராய்ச்சியிலும் உகந்த வகையில் ஒழுங்குமுறை மேம்பாடுகள் போன்ற காரணங்களால் உலகத் தரவரிசையில் சிங்கப்பூர் ஓரிடம் முன்னேறியுள்ளது என்று உலகப் போட்டித்தன்மை மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் வெளியிடப்படும் இப்பட்டியலில் மொத்தம் 63 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
அரசாங்க நடைமுறைகளிலும் தொழில் மாதிரிகளிலும் சமுதாயத்திலும் புதிய மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதின் அடிப்படையில் அவை மதிப்பிடப்படுகின்றன.
'தொழில்நுட்பத்தில்' சிங்கப்பூர் முதலிடம் பிடித்தது. ஒழுங்குமுறைக் கட்டமைப்பில் அது தனது முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. ஆயினும், 'எதிர்காலத்திற்கான ஆயத்தநிலை'யில் சிங்கப்பூர் பத்தாம் இடத்தையே பிடித்தது.
நான்கு இடங்கள் முன்னேறி பட்டியலில் எட்டாம் இடத்திற்கு உயர்ந்த தென்கொரியா, ஆசிய அளவில் இரண்டாவதாக வந்தது.
ஹாங்காங் பெரும் சரிவைச் சந்தித்து, இரண்டாமிடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு இறங்கியது.
அவ்வட்டாரம் ஆய்வு, உருவாக்கச் செலவினத்தில் 41ஆம் இடத்தையும் ஆய்வு, உருவாக்க உற்பத்தித்திறனில் 24ஆம் இடத்தையும் பிடித்தது.
இணையப் பாதுகாப்பைப் பொறுத்தமட்டில், அதிநவீன இணையத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு முழுமையாக ஆயத்தமாவதில் இன்னும் வெகுதொலைவு செல்ல வேண்டியுள்ளது என்று உலகப் போட்டித்தன்மை மையம் தெரிவித்துள்ளது.
அந்த அம்சத்தில் கிழக்காசிய நாடுகள் முன்னிலையில் இருப்பதாகவும் அது குறிப்பிட்டது.

