பருவநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள எதிர்மறைத் தாக்கங்களை மாற்றுவதற்கு வளங்களின் நிலையான பயன்பாடு முக்கியம் என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் வலியுறுத்தியுள்ளார்.
தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான சமனின்மையால் பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பணவீக்கம் உயர்ந்துவிட்டது. அத்தகைய சமனின்மையைத் தவிர்க்க, நிலைத்த பொருளியல் வளர்ச்சியை எட்டுவதிலும் நீடித்து நிலைக்கவல்ல வேலைச் சூழலை ஊக்குவிப்பதிலும் கொள்கை வகுப்பாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று திரு மேனன் கேட்டுக்கொண்டார்.
நாணய ஆணையமும் சான் ஃபிரான்சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்கியும் இணைந்து நேற்று ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் ஆசிய வங்கியியல், நிதிக் கருத்தரங்கில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு சொன்னார். சான் ஃபிரான்சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் மேரி டாலியும் திரு மேனனின் கருத்தை ஒப்புக்கொண்டார்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, பயனீட்டாளர் தேவை மீட்சி பெற்று, கடந்த ஓராண்டாக பணவீக்கம் உயர்ந்துள்ளதாக திருவாட்டி மேரி குறிப்பிட்டார்.
கடந்த 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு சிங்கப்பூரில் பணவீக்கம் ஆக உச்சத்தை எட்டியுள்ளது.
அதுபோல, கடந்த நாற்பதாண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் பொருள்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன.

