ஆண்ட்ராய்டு கையடக்கச் சாதனங்களைப் பயன்படுத்துவோர் இப்போது ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மோசடி தொடர்பானவை என்பதால் தடுக்கப்பட்டு இருக்கும் எண்களில் இருந்து அழைப்பு வரும் போது அத்தகைய அழைப்புகளை அந்தச் செயலி தடுத்துவிடும்.
கூகல் பிளேஸ்டோரில் இருந்து கைப்பேசிகளில் ஸ்கேம்ஷீல்டு (ScamShield) என்ற அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அந்தச் செயலி 2020 நவம்பர் முதல் ஆப்பிள் நிறுவன கைப்பேசிகளில் பயனில் இருந்து வருகிறது.
மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் ஆகிய இருவரும் அந்தச் செயலியை நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.
தேசிய குற்றச்செயல் தடுப்பு மன்றத்தின் 40வது ஆண்டுவிழாவைக் குறிக்கும் வகையில் நேற்று நடந்த விருந்தில் கலந்துகொண்டு செயலியை அவர்கள் வெளியிட்டனர்.
அந்தச் செயலி கண்டுபிடிக்கும் மோசடியான குறுஞ்செய்திகள் தேசிய குற்றச்செயல் தடுப்பு மன்றத்திற்கும் காவல்துறைக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
மோசடி அழைப்புகள், மோசடிக் குறுஞ்செய்திகளில் சிக்காமல் பொதுமக்கள் தப்பிக்க சிறந்த முறையில் புதிய செயலி உதவும் என்று காவல்துறை தெரிவித்தது.
தேசிய குற்றச்செயல் தடுப்பு மன்றமும் அரசாங்க தொழில்நுட்ப முகவையின் ஒரு பிரிவான 'ஓப்பன் கவர்மெண்ட் புராடக்ட்ஸ்' என்ற அமைப்பும் சேர்ந்து அந்தச் செயலியை உருவாக்கி உள்ளன.
மன்றமும் காவல்துறையும் நிர்வகிக்கும் ஒரு தகவல் தளத்தில் இருந்து வரும் அழைப்புகளைத் செயலி தடுத்துவிடும்.
இதனிடையே, புதிய செயலி தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மன்றத்தின் தலைவர் ஜெரால்டு சிங்கம், இப்போது வெளிவந்துள்ள செயலி, கூகல் பிளேஸ்டோரில் செப்டம்பர் 1ஆம் தேதி சாதாரண முறையில் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தார்.
செப்டம்பர் 14ஆம் தேதி நிலவரப்படி ஸ்கேம்ஷீல்டு ஆப்பிள் செயலியை 315,000க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள்.
அந்தச் செயலி, இதுவரையில் 5.8 மில்லியனுக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் பற்றி புகார் தெரிவித்து இருக்கிறது; 29,000க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களைத் தடுத்து இருக்கிறது. அந்த எண்கள் மோசடிக் காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

