சிங்கப்பூரில் புத்தாக்கமிக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும் இங்கு நீடித்த நிலைத்தன்மையுடைய நிதி, கொடைத்தன்மைக்குப் பங்களிக்க குடும்ப அலுவலகங்களுக்கு வாய்ப்புகள் இருப்பதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
'குளோபல்-ஏஷியா ஃபேமிலி ஆஃபிஸ்' கருத்தரங்கில் நேற்று பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
"உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் புதிய தொழில் சமூகங்களுக்கு இல்லமாக இப்போது சிங்கப்பூர் உள்ளது. வேளாண்-தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அவை பெரிய அளவிலான தீர்வுகளை வழங்குகின்றன," என்றார் அவர்.
குறிப்பிட்ட ஒரு பணக்கார குடும்பத்துக்காக அதன் முதலீடுகளையும் சொத்துகளையும் நிர்வகிக்கும் தனியார் நிறுவனமே குடும்ப அலுவலகமாகும். சில நிறுவனங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கக்கூடும்.
புத்தாக்கமிகுந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் அப்பாற்பட்டு, நம்பிக்கை அளிக்கும் தொழில்முனைவர்களுக்கு மதியுரை வழங்கவும் அடுத்த தலைமுறை வர்த்தகத் தலைவர்களைப் பேணவும் குடும்ப அலுவலகங்கள் உதவலாம் என்று திரு வோங் குறிப்பிட்டார்.
உலகளவில் கடந்த 20 ஆண்டுகளாக குடும்ப அலுவலகங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதைச் சுட்டிய அவர், அண்மைய ஆண்டுகளில் உலகில் செல்வம் அதிகரித்திருப்பதை இது உணர்த்துவதாகச் சொன்னார்.
உலகளாவிய இந்தப் போக்கில் சிங்கப்பூர் பலனடைந்துள்ளதாக திரு வோங் குறிப்பிட்டார். இங்கு இயங்கிவரும் குடும்ப அலுவலகங்களின் எண்ணிக்கை சுமார் 700ஆக உள்ளது. ஒப்புநோக்க, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருந்தது.
குடும்ப அலுவலகங்கள் இன்னும் அதிகமாக பங்களித்து உள்ளூர் அறக்கொடை அமைப்புகளுக்கு ஆதரவளிக்க அவற்றை எப்படி ஊக்குவிக்கலாம் என்பதைக் கண்டறிய, வரி ஊக்குவிப்புத் திட்டங்களை அரசாங்கம் மறுஆய்வு செய்து வருவதாக திரு வோங் சொன்னார்.