அண்மையில் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரி
லிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 37 வயது ஆடவர் ஒருவர் வெடிகுண்டு
மிரட்டல் விடுத்தார்.
இதனால் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் உட்கொண்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், போதைப்பொருளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்கும் தீங்குகளுக்கும் அந்த ஆட
வரின் செயல் ஓர் எடுத்துக்காட்டு என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
"போதைப்பொருள், அவற்றை உட்கொள்பவர்களுக்கு மட்டும் தீங்கு விளைவிப்பதில்லை. போதைப் பித்தர்களைச் சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவர்," என்று சிங்கப்பூர் போதைப்பொருள் தடுப்புச் சங்கம் நேற்று நடத்திய மாநாட்டில் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டில் எல்எஸ்டி வகை போதைப்பொருளை உட்கொண்டு தமது தாயார் மற்றும் பாட்டியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 25 வயது ஆடவரையும் அவர் உதாரணம் காட்டினார்.
அந்த ஆடவரை காலவரையறைஇன்றி தடுத்து வைத்திருக்கும்படி இம்மாதம் 23ஆம் தேதியன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
"போதைப் புழங்கியின் செயல் காரணமாக உயிரிழந்த அந்தப் பாட்டிக்கும் தாயாருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையிலும் குரல் கொடுக்கும் வகையிலும் எந்த ஒரு சமூக ஆர்வலரும் செயல்படவில்லை. அந்த இருவரின் உயிரும் முக்கியம்," என்று திரு சண்முகம் கூறினார்.
போதைப்பொருள் பயன்பாடு சட்டவிரோதமானதல்ல என்று
அண்மைய ஆண்டுகளில் சில நாடுகள் அவற்றின் சட்டங்களில் மாற்றம் செய்துள்ளன.
உதாரணத்துக்கு, கஞ்சா செடி பயிரிடுவதையும் கஞ்சா உட்கொள்வதையும் கடந்த ஜூன் மாதத்திலிருந்து தாய்லாந்து அனு
மதிக்கிறது. இதையடுத்து, கஞ்சா உட்கொள்வதால் அங்குள்ள
பதின்மவயதினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி செய்திகள் வெளியாகி உள்ளன.
கஞ்சா கலந்த பிஸ்கட் ஒன்றைச் சாப்பிட்ட மூன்று வயது குழந்தையை உடனடியாக மருத்துவ
மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டதை திரு சண்முகம் சுட்டினார்.
இதையடுத்து, பள்ளிகளில் கஞ்சா பயன்படுத்துவது, சிறுவர்
களிடம் கஞ்சா விற்பது, கர்ப்
பிணிகளிடமும் தாய்ப்பால் ஊட்டும் பெண்களிடமும் கஞ்சா விற்பது ஆகியவற்றுக்குத் தாய்லாந்து அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பாக சிங்கப்பூரின் கொள்கைகள் அறிவியல், ஆதாரங்கள், பகுத்தறிவு அடிப்படையிலானவை என்று
அமைச்சர் சண்முகம் கூறினார்.
கஞ்சா உட்கொள்வதால் குணப்படுத்த முடியாத மூளைச் சிதைவு, மூளைச் சுருக்கம், மிகக் கடுமையான மனநோய் போன்றவை ஏற்படுவதை உலகளாவிய ஆய்வுகள் தெரிவிப்பதாக 2015ஆம் ஆண்டில் மனநலக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மருத்துவரின் பரிந்துரையின்கீழ் மருத்துவப் பயன்பாட்டுக்காக நிபந்தனைகளுக்கு உட்பட்டு கஞ்சா போன்ற போதைப்பொருள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்றார் அவர்.

