சிங்கப்பூரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே ருவாண்டா வெற்றி பெற்று உள்ளது என்று அந்நாட்டின் அதிபர் பால் காகேமே தெரி வித்துள்ளார்
மக்களிடம் முதலீடு செய்தது, விவேகமான கொள்கை வாய்ப்புகளை பின்பற்றியது, புத்தாக்க முறைகளை புகுத்தியது போன்றவற்றை உள்ளடக்கிய பாதையில் ருவாண்டா பயணித்தது என்று அவர் கூறினார்.
நாட்டு நிர்மாணத்தில் சிங்கப் பூரின் வெற்றிக் கதை எங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது என்றார் அவர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ருவாண்டாவின் வளர்ச்சி பற்றி அவர் விரிவுரை ஆற்றினார்.
தன்னுடைய நாட்டின் வளர்ச்சி எளிதாக வந்துவிடவில்லை என்று குறிப்பிட்ட திரு காகேமே, மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அது விளங்குவதாகவும் கூறினார்.
என்டியு மாஜுலா விரிவுரை தொடரின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
திரு காகேமே தமது நாட்டின் புதிய வளர்ச்சிகளைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
"கொள்ளைநோய் பரவிய காலத்திலிருந்து சிங்கப்பூரைப் போல ருவாண்டாவும் தடுப்பூசி, மருந்துத் தயாரிப்பு நிலையங்களை அமைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
"அடுத்த ஆண்டில் ஜெர்மன் மருந்து நிறுவனமான பயோஎன்டெக்குடன் சேர்ந்து கிகாலியில் முதல் 'mRNA' தடுப்பூசி வசதி அமைக்கும் பணி தொடங்கப்படும். அது, முடிவடையும்போது ஆப்பிரிக்காவின் முதல் mRNA தடுப்பூசி தொழிற்சாலையாக இருக்கும்," என்று அதிபர் சொன்னார். ருவாண்டா படுமோசமான நிலையில் இருந்து முன்னேறி யிருப்பதாகவும் அவர் கூறினார். 1994ல் நடந்த படுகொலை சம்பவத்தில் ஏறக்குறைய 800,000 பேர் பெரும்பாலும் டுட்சி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். பொதுச் சொத்துகள் நாசமாக்கப்பட்டன.
இன்று ருவாண்டா மீண்டு நல்ல நிலைக்கு வந்துள்ளது. இன்னமும் பயணிக்க வேண்டிய பாதை வெகுதூரம் உள்ளது என்று அதிபர் காகேமே தெரிவித்தார்.
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவில் 12 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.