பொன்மணி உதயகுமார்
மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதம் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. தக்க நேரத்தில் பரிசோதனை செய்வது உயிரைக் காக்கும் என்ற கருப்பொருளில் நடக்கும் இவ்வாண்டின் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி, பல நிகழ்ச்சிகளுக்கு மார்பகப் புற்று நோய் அறக்கட்டளையும் இதர சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
ஈராண்டுக்குப் பிறகு நேரில் நடக்கும் இந்த விழிப்புணர்வு மாதத் தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப், பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச் சருமான இந்திராணி ராஜா, சுகாதார, சட்ட அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மாதமும் அடுத்த மாதமும் சிங்கப்பூர் புற்றுநோய்ச் சங்கம், குறிப்பிட்ட பரிசோதனை நிலையங்களில் மார்பகப் புற்று நோயைக் கண்டறியும் 'மெமோகிராம்' மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள $25 நிதியுதவி வழங்கும். சிங்கப்பூர் தேசியப் பல் கலைக்கழக புற்றுநோய்க் கழகம், குறிப்பிட்ட பலதுறை மருந்தகங் களில் கூடுதல் $10 நிதியுதவியை வழங்கும்.
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் பாதிக்கப்படுபவரின் உயிர்வாழ்வு விகிதம் 90 விழுக்காடாக இருக்கும் நிலையிலும், 2020ல், 50லிருந்து 69 வயதிற்கு உட்பட்ட பெண்களில், ஐந்தில் இரண்டு பேர் மட்டுமே 'மெமோகிராம்' பரிசோதனை செய்துகொண்டனர் என்பதை அமைச்சர் இந்திராணி ராஜா தம் உரையில் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை, பெண்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்றுநோய் என்றும் புற்று நோயால் நேரும் மரணங்களில் அதிகமானவை மார்பகப் புற்று நோயால் நிகழ்கின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தவறான தகவல்களை நம்பு வதைத் தவிர்த்து, மருத்துவப் பரி சோதனைகளுக்கு நேரத்தோடு செல்லவேண்டும் என்று பெண்களை அவர் வலியுறுத்தினார்.
விழிப்புணர்வு மாதத்தின் ஓர் அங்கமாக, இம்மாத இறுதிவரை, மார்பகப் புற்றுநோய் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள 'பிராஆர்ட்' கண்காட்சியை ஐயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியின் அடித்தளத்தில் இலவசமாகக் காணலாம்.
ஆடையணிகலன் மூலம் விழிப்புணர்வை உண்டாக்குவது இதன் இலக்கு.
இந்தக் கண்காட்சியின் ஓர் அங்கமாக நடந்த போட்டியில் சிறந்த மூன்று மாணவ வடிவமைப்பாளர்கள் நேற்று அதிபரிடமிருந்து பரிசு பெற்றனர்.
மேலும், 'பிங்க் ரிப்பன் வாக் 2022', அனைத்து மொழிகளிலும் கருத்துக்களங்கள், ஆதரவு தெரிவிக்கும் ஒளியூட்டுகள் போன்றவை இம்மாதம் முழுவதும் நடைபெற உள்ளன.
மார்பக சுகாதாரத்திற்கு நேரம் ஒதுக்குங்கள் என்ற தலைப்பில் தமிழில் ஒரு கருத்துக்களம் அஸ்யஃபா பள்ளிவாசலில் இம்மாதம் 16ஆம் தேதி பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும்.
விழிப்புணர்வு மாதத்தில் சிங்கப்பூரின் ஆறு பாலங்கள், மெர்லயன், கடைத்தொகுதிகள் என்று பலதரப்பினர் கட்டடங்களை இளஞ்சிவப்பில் ஒளியூட்டுவார்கள் அல்லது பொருள்களைக் கொண்டு அலங்கரிப்பார்கள்.
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர், ஐந்து இடங்களில் உள்ள தானியங்கி விற்பனை இயந்திரங்களில் இளஞ்சிவப்பு நிற ரிப்பன்களை வாங்கிக்கொள்ளலாம்.