'தோஃபு' எனும் சோயா உணவுப்பொருளைத் தயாரிக்கும் 'ஹென்சின் ஃபுட்' நிறுவனம் அதன் வளாகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாததால் நேற்று $4,200 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரிகள் அந்த வளாகத்தைச் சோதனையிட்டபோது அங்கு நிறைய கரப்பான் பூச்சிகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதற்கு மறுநாள் நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. நிறுவனம் தயாரித்த 'தவ் குவே' உணவுப் பொருள்களைத் திரும்பப் பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
அதிகாரிகள் சுட்டிக்காட்டிய குறைகளைச் சீர்படுத்திய பிறகு, பிப்ரவரி 9ஆம் தேதி மீண்டும் செயல்பட அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு என்பது கூட்டுப் பொறுப்பு என்று குறிப்பிட்ட சிங்கப்பூர் உணவு அமைப்பு, உணவு நிறுவனங்களில் சுகாதாரக் குறைவான நடவடிக்கைகளைக் கண்டால் உடனடியாக அதுபற்றித் தகவல் அளிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

