17ஆம் நூற்றாண்டிலிருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்களில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூதாதையர் இருந்தனர். நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்தவர்களில் பலர் சிங்கப்பூரை தங்கள் தாயகமாக்கிக்கொண்டனர்.
1960களில் சிங்கப்பூரில் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சங்கம், முஸ்லிம் ஜமாஅத் நாகப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 900 பேர் கொண்ட சுமார் 250 குடும்பங்கள் சிங்கப்பூரில் தற்போது வசிக்கின்றனர். அவர்களில், நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அடித்தளத் தலைவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவர் ஆகியோர் அடங்குவர்.
சங்கத்தின் பல்வேறு சமூக பங்களிப்புகளில் தங்களை இணைத்துக்கொண்டு இவர்கள் செயல்பட்டனர். கடந்த 2019ல் நாகப்பட்டின சங்கம் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரையும் உள்ளடக்கி, சிங்கப்பூருக்குப் பங்களிப்பு செய்து வருகின்றது.
இந்திய முஸ்லிம் பேரவையின் இணை அமைப்புகளில் ஒன்றாகச் செயல்படும் நாகப்பட்டினம் சங்கத்தின் ஆண்டிறுதிப் பொதுக் கூட்டம் சங்கத்தின் தலைவர் ஹாஜி எஸ்.ஜெகபர் சாதிக் தலைமையில் அப்துல் கபூர் பள்ளிவாசலில் சென்ற மாதம் 25ஆம் தேதி மாலை நடைபெற்றது.
ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, சங்கம் எதிர்நோக்கும் சவால்களை எடுத்துக்கூறி உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆண்டிறுதி வரவுசெலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு, சங்கத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

