வரிஏய்ப்பு செய்ததாக பிரபல ஈமச்சடங்கு நிறுவன உரிமையாளரான 75 வயது ஆடவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
டே ஹாய் சூன் (படம்) எனப்படும் அவர் $427,000க்கும் மேல் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் அவர் தமது வர்த்தகத்தை ஜிஎஸ்டி வரிக்கட்டமைப்பில் பதிவு செய்யத் தவறியதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டைரக்ட் ஃபியூனரல்' எனப்படும் நிறுவனத்தின் உரிமையாளரான அவர் வரிஏய்க்கும் நோக்கத்தில் தமது வருமானத்தைக் குறைத்து அறிவித்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.
கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் 2013ஆம் ஆண்டுவரையிலான மூன்றாண்டு காலத்தில் 2.2 மில்லியன் வெள்ளியை அவர் கணக்கில் காட்டவில்லை. அதன்மூலம், $427,427 தொகையை வரியாக அவர் செலுத்தத் தவறினார்.
இது தவிர, 2010ஆம் ஆண்டு தமது நிறுவனத்தின் பொறுப்புகளை ஜிஎஸ்டி கட்டமைப்பில் பதிவு செய்யுமாறு ஜிஎஸ்டி தலைமை அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்க அவர் தவறினார். இதன்மூலம் செலுத்தப்படாத வரியின் மதிப்பு $286,963.
வருமான வரிப்படிவத்தில் பொய்யான அறிவிப்பு செய்தது நிரூபிக்கப்பட்டால் இவருக்கு மூன்றாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம். இவற்றுடன், வரிஏய்ப்பு செய்த தொகையைக் காட்டிலும் மூன்று மடங்கு அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
வர்த்தகம் ஒன்று ஜிஎஸ்டிக்காக பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அதனை பதிவு செய்யவேண்டும். தவறினால், பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து செலுத்தப்பட வேண்டிய வரித்தொகையை பத்து மடங்காக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்ட டே $80,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
வழக்கமாக மேற்கொள்ளப்பட்ட தணிக்கை நடவடிக்கையின்போது டேயின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும், முந்திய ஆண்டின் வருமானத்தை தவறின்றி அறிவிக்குமாறு வர்த்தக முதலாளிகளையும் தனிப்பட்டவர்களையும் அது வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.