கடந்த 2019ஆம் ஆண்டு தமது 63 வயது கணவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு இருந்த பெண், சம்பவம் நடைபெற்ற வேளையில் தெளிவற்ற மனநிலையில் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தம்மைத் தற்காக்க இயலாத நிலையில் அவர் இருந்ததாகவும் மனநலக் கழகம் சான்று அளித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சீன நாட்டுப் பெண்ணான வாங் ஷுஸென், 57, என்பவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கு பற்றி சட்ட அமைச்சருக்குத் தெரிவிக்குமாறும் அமைச்சரின் உத்தரவு வரும் வரை சாங்கி சிறைச்சாலையில் அந்தப் பெண்ணை தடுத்து வைக்குமாறும் நீதிமன்றம் தமது உத்தரவில் குறிப்பிட்டது.
2019 அக்டோபர் 27ஆம் தேதி அதிகாலை நேரம் தமது அங் மோ கியோ வீட்டில் முன்னாள் காவலரான டே ஹாக் பைன் எனப்படும் தமது கணவரைக் கொலை செய்ததாக அந்தப் பெண் மீது முன்னர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
தற்போது, நோக்கமில்லா மரணம் விளைவித்த குற்றச்சாட்டை அவர் எதிர்நோக்குகிறார். சம்பவத்தன்று அந்தப் பெண் 2.6 கிலோகிராம் எடையுள்ள கண்ணாடி பந்து ஒன்றால் தமது கணவரின் தலையில் குறைந்தபட்சம் மூன்று தடவை தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைக்குத் தயாராகும் நிலையில் இருக்கிறாரா என்று சான்றிதழ் பெறும் நோக்கில் அந்தப் பெண்ணை உளவியல் கண்காணிப்பில் வைக்குமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் விண்ணப்பித்து இருந்தார்.
முன்னதாக, அந்தப் பெண் மனரீதியாகப் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறி காணப்பட்டதாக மனநலக் கழகம் தெரிவித்து இருந்தது.