பொருளியலில் மூத்தோருக்கு வாய்ப்புகள் இருப்பதையும் மேம்பட்ட அந்திமகால பராமரிப்பு வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய 'பிஏபிஎஸ்ஜி' எனும் மக்கள் செயல் கட்சியின் மூத்தோர் குழு உதவிக்கரம் நீட்டவுள்ளது.
சிங்கப்பூரின் சமூகப் பிணைப்புக்குப் புத்துயிர் அளிக்கவும் மூப்படைவதன் தொடர்பில் நிலவும் எதிர்மறைக் கருத்துகளைக் கையாளவும் இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் மக்கள்தொகை விரைவில் மூப்படைந்து வருகிறது; 2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவர் 65 வயதைத் தாண்டியிருப்பர் என்று அண்மையில் வெளியான மக்கள்தொகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் மாறிவரும் மூத்தோரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படவேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று (1 அக்டோபர்) கொன்கோர்ட் ஹோட்டலில் நடைபெற்ற வயதானவர்களுக்கான அனைத்துலக தினத்தை அனுசரிக்கும் நிகழ்வில் திரு வோங் பேசினார்.
"ஆக்ககரமான முறையில் நீண்டகாலம் வேலை பார்ப்பதை நாம் அரவணைத்து மூத்தோரை மிகவும் மக்கியமான சொத்தாகக் கருதவேண்டும். மூத்தோரிடையே இருக்கும் மாபெரும் அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்திக்கொள்ள புதிய வழிகளைக் கண்டறியவேண்டும்," என்று திரு வோங் சுட்டினார்.
மூத்தோருக்குப் பொருளியலில் நல்ல வாய்ப்புகள் இருப்பதை உறுதிசெய்ய அவர்கள் விருப்பப்பட்டால் கூடுதல் காலம் தொழில்துறையில் இருக்க மக்கள் செயல் கட்சியின் மூத்தோர் குழு உதவி செய்யும் என்றும் அவர் சொன்னார்.
வேலையிடங்களில் ஊழியர்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படாமல் இருக்க புதிய சட்டம் ஒன்றும் வரையப்பட்டு வருகிறது.