வாழ்க்கையின் வசதிகளை தொழில்நுட்பம் நமக்கு எளிமையாக்கியுள்ளது என்றாலும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி போன்ற குற்றங்களும் நிகழ்த்தப்படுகின்றன. இந்த இணைய மிரட்டல்களை முறியடிக்க வேண்டுமானால், பொதுத் தகவலறிவு முக்கிய பங்கு வகிக்கிறது.
எட்டாவது சமூக மேம்பாட்டு மன்றத்தில் சட்ட விழிப்புணர்வு வாரங்கள் என்ற நேற்றைய நிகழ்வில் பேசிய சட்ட இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங், "இணைய மோசடிகள், இணையத் தாக்குதல்கள், தனறாய தகவலைப் பரப்புதல் போன்றவை மக்களின் பணத்தையும் நேரத்தையும் மட்டும் குறிவைப்பதில்லை. மாறாக, அவை சமூக ஒற்றுமையைக் கீழறுக்கிறது. ஒருவர் மற்றர் மீது அவநம்பிக்கை கொள்ளும்போது மக்களிடையே உள்ள நெருக்கத்தில் விரிசல் ஏற்படுகிறது.
இலவச சட்ட சேவை வழங்கும் சுமார் 200 வழக்கறிஞர்கள், பங்காளிகள், விருந்தினர்கள் முன் பேசிய கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சருமான திரு டோங், "மின்னிலக்கத் தளம் ஆபத்து நிறைந்ததாக உள்ளது. ஒருவர் அதை முறையாகப் பயன்படுத்தும் முறையை அறிந்திராவிடில், அது மிகப் பெரிய பிரச்சினைகளை உண்டாக்கி வாழ்வில் மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்திவிடும்," என்றார்.
இந்த ஆண்டு இடம்பெறும் சட்ட விழிப்புணர்வு தொடரில் பொதுமக்களுக்கு இணைய பாதுகாப்பு குறித்தும் அடிப்படை சட்ட தகவல் அறிவும் போதிக்கப்படும். கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் இம்மாதம் 27ஆம் தேதி வரை 11 இணையக் கருத்தரங்குகள் இந்தத் தலைப்பு தொட்டு நேரலையாகக் காட்டப்பட்டன.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 14,349 இணைய மோசடிச் சம்பவங்கள் பதிவாயின. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 7,746 ஆக இருந்தது.
ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்கள், சிங்கப்பபூர் வழக்கறிஞர் சங்க இலவச சட்ட சேவைப் பிரிவு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிறுவன வழக்கறிஞர் சங்கம் ஆகியவை இணைந்து இந்த தொடர் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்துகின்றன.