முன்னணி அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான எம்எஸ்டி, துவாசில் உள்ள தனது தயாரிப்பு ஆலையை $280 மில்லியன் செலவில் விரிவுபடுத்துகிறது.
அந்நிறுவனம் புதிய பொதியாக்க (பேக்கேஜிங்) வசதியை நேற்று அறிமுகப்படுத்தியது.
அத்துடன், அந்நிறுவனத்தின் புதிய தலைமுறை உறிஞ்சுமருந்து தயாரிப்பு ஆலைக்கான நில அகழ்வு நிகழ்ச்சியும் நேற்று இடம்பெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், எம்எஸ்டியின் முதலீட்டால் உள்ளூரில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்றார்.
இதனையடுத்து, சிங்கப்பூரில் அந்நிறுவனத்தில் பணிபுரிவோர் எண்ணிக்கை 1,800க்கு மேற்பட்டதாக உயரும்.
இந்த விரிவாக்கத்தின்மூலம் சிங்கப்பூரில் எம்எஸ்டி நிறுவனத்தின் மொத்த முதலீடு $3 பில்லியனைத் தாண்டும் என்று அமைச்சர் கான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் மேலும் $700 மில்லியனை முதலீடு செய்ய எம்எஸ்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கிய அத்திட்டத்தின் ஒரு பகுதியாக துவாஸ் ஆலை விரிவாக்கம் இடம்பெறுகிறது.
புதிய உறிஞ்சுமருந்து தயாரிப்பு ஆலை 2026ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கும்.
எம்எஸ்டி நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பு மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கிறது என்று திரு கான் குறிப்பிட்டார்.
அதன் முதன்மையான பத்துப் பொருள்களில் ஏழு சிங்கப்பூரில் தயாரிக்கப்படுகின்றன.
அரசாங்கத்தின் கவனமான திட்டமிடல், ஒழுங்குமுறை நடவடிக்கைகளே உலக அளவில் போட்டித்தன்மைமிக்க உயிர்மருத்துவத் துறை சிங்கப்பூரில் அமைந்திருப்பதற்கான காரணம் என்றார் அமைச்சர் கான்.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உயிர்மருத்துவத் துறையின் பங்கு மூன்று விழுக்காட்டிற்கும் அதிகம் என்றும் அனைத்துலகச் சந்தைகளுக்காக $17 பில்லியனுக்கும் அதிகமான பொருள்களை அத்துறை தயாரிக்கிறது என்றும் அவர் சொன்னார்.
சிங்கப்பூர் உயிர்மருத்துவத் துறையில் இப்போது ஏறக்குறைய 9,000 பேர் பணிபுரிகின்றனர். இது 2000வது ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகம்.

