தொழில்நுட்பத் திறனாளர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க புதிய திட்டம்
மாதங்கி இளங்கோவன்
வேலை பார்த்துக்கொண்டே தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பைத் தொடரும் வாய்ப்பைப், பலதுறை தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயக் கல்வியை முடித்த 400 பேர் பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அடுத்த இரண்டாண்டுகளில் இந்தத் துறையில் பட்டம்பெறுவர். அதற்கான புதிய திட்டம் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.
'ஃபியூஷன்' என்னும் அந்தப் புதிய திட்டத்தை என்சிஎஸ் நிறுவனமும் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து தொடங்கி வைத்தன.
ஃபியூஷன் திட்டத்தின்கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் பட்டயக் கல்வியை முடித்தவர்களுக்கு, என்சிஎஸ் நிறுவனம், மென்பொருள் உருவாக்கம் இணையப் பாதுபாப்பு ஆகிய துறைகளில் பணியில் அமர்த்தி பயிற்சி அளிக்கும்.
அத்துடன், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பட்டக் கல்வி பயில்வதற்கு ஆகும் முழுக் கட்டணத்தையும் என்சிஎஸ் ஏற்றுக்கொள்ளும்.
தி ஆர்ட்ஸ் ஹவுஸில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், என்சிஎஸ் நிறுவனமும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் தங்கள் கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், "சிங்கப்பூரில் தொழில்நுட்பத் துறையில் திறன்வாய்ந்தவர்களை ஈர்ப்பது நமக்கு முக்கியக் குறிக்கோளாக உள்ளது.
"நம் நாட்டிலும், சிங்கப்பூர் கால்பதிக்கும் நாடுகளிலும் சாதிப்பதற்கு தொழில்நுட்பத் திறனாளர்கள் மிக முக்கியம்," என்று வலியுறுத்தினார்.
பல்வேறு கல்விப் பாதைகளைத் தேர்ந்தெடுத்துள்ள இளம் திறனாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் 'ஃபியூஷன்', அவர்களுடைய திறன்களுகளை மெருகூட்டுவதோடு வேலையை ஆரம்பிப்பதற்கு நல்ல ஊக்குவிப்பையும் தருவதாக கூறினார் திரு டான்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் பட்டயம் பெற்ற மாணவர்கள் இத்திட்டத்தினால் என்சி எஸ் நிறுவனத்தில் இணையப் பாதுகாப்பு, மென்பொருள் உருவாக்கம் போன்ற துறைகளில் பணிபுரிவதோடு வல்லுநர்களின் வழிகாட்டுதலுடன் பயிற்சியும் பெறவுள்ளனர்.
இம்மாணவர்கள் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்திலும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்திலும் பட்டயக் கல்வியை மேற்கொள்வதற்கு நிதியும் தருகின்றது என்சிஎஸ் நிறுவனம்.
தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் பயிலும் 400 மாணவர்கள் இதுபோன்ற திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு நன்மையடைந்து தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பட்டயக் கல்வியை மேற்கொண்டவாறு பணிபுரியவுள்ளனர்.
மொத்தம் 800 பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்கெனவே 'நியூக்ளியஸ்' என்னும் திட்டத்தின்கீழ் பணியாற்றிக்கொண்டே படிப்பைத் தொடர்கின்றனர்.
என்சிஎஸ் நிறுவனத்தில் தற்போது இணையப் பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிகிறார் விஷ்ணு லோகநாதன், 27.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நூக்கிலியஸ் திட்டத்தினால் இங்கு வேலைவாய்ப்பு பெற்ற விஷ்ணு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இணையப் பாதுகாப்புத் துறையில் மேன்மையடைய சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சில பாடங்களைப் படித்து சான்றிதழ்களையும் என்சிஎஸ் நிறுவனத்தின் நிதி ஆதரவுடன் பெறுவார்.
இந்த நிறுவனத்தில் பணிபுரி வதால் பல புதுமையான அனுபவங்களைப் பெற்றுள்ளதாக கூறிய விஷ்ணு, நல்ல முன்மாதிரிகளின் வழிகாட்டுதல், குழு உறுப்பினர் களுடன் சேர்ந்து செய்யும் வேலை அனுபவம் ஆகியவை அவருடைய கற்றலுக்கு மேன்மேலும் உதவியதாக சொன்னார்.
என்சிஎஸ் நிறுவனம் மொத்தம் 1,000 மாணவர்களுக்குத் தொழில்நுட்பம் சார்ந்த வேலை அனுபவங்களையும் அளிக்கவுள்ளது.
இந்த நிறுவனத்தின் மூன்று திட்டங்களான, 'பியூஷன்', 'நியூக்ளியஸ்', 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' ஆகியவை பணியாற்றிக்கொண்டே மேற்படிப்பைத் தொடர வழிவகுக்கும் திட்டங்களாகும். இதன்மூலம் தொழில்நுட்பத் துறையில் 1,600 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.