சிங்கப்பூருக்கு வரும் அனைத்துலகப் பயணிகளின் எண்ணிக்கை எட்டாவது மாதமாக செப்டம்பரிலும் தொடர்ந்து அதிகரித்து கொவிட்-19க்குப் பிந்திய மற்றொரு மாதாந்திர சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் சிங்கப்பூருக்கு 752,305 பயணிகள் வந்தனர்.
ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 728,744 ஆக இருந்ததாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் இங்கு வந்த 1.5 மில்லியன் பேர் என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் இவ்வாண்டின் செப்டம்பர் எண்ணிக்கை குறைவுதான்.
இவ்வாண்டில் சிங்கப்பூருக்கு வருகை தந்த நாட்டினரின் பட்டியலில் தொடர்ந்து ஆறாவது மாதமாக இந்தோனீசியா முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருந்தன.
மூன்றாவது இடத்தில் மலேசியாவும் நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் வந்த நிலையில் சீனாவிலிருந்து வந்தோர் எண்ணிக்கை குறைவானதால் ஐந்தாம் இடத்தில் அந்த நாடு இருந்தது.
இந்தோனீசியாவிலிருந்து செப்டம்பர் மாதம் 115,433 பேர் வந்த நிலையில் அதற்கு முந்திய ஆகஸ்ட் மாதம் அந்த எண்ணிக்கை 108,252 ஆக இருந்தது.
அதேபோல இந்தியாவிலிருந்து ஆகஸ்ட் மாதம் 79,249 பேர் வந்த நிலையில் செப்டம்பர் மாதம் அந்த எண்ணிக்கை 83,265க்கு அதிகரித்தது.
மலேசியாவிலிருந்து ஆகஸ்ட் மாதம் 63,905 பேரும் செப்டம்பர் மாதம் 79,692 பேரும் சிங்கப்பூர் வந்தனர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து ஆகஸ்ட் மாதம் 56,917 பயணிகளும் அதற்கு அடுத்த மாதம் 79,150 பயணிகளும் வருகை புரிந்தனர்.
2017ஆம் ஆண்டுமுதல் 2019ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ஆகப் பெரிய பயணிகள் வருகைச் சந்தை யாக விளங்கி வந்த சீனாவிலிருந்து செப்டம்பர் மாதம் 13,601 பேர் சிங்கப்பூருக்கு வந்தனர்.
இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் இங்கு வந்த 14,735 பேரைக் காட்டிலும் குறைவு.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவிலிருந்து 248,568 பேர் வந்திருந்த நிலையில் இவ்வாண்டு செப்டம்பரில் அங்கிருந்து வந்தோர் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்தது.
மொத்தமாக, இந்த ஆண்டில் இதுவரை 3.7 மில்லியன் பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தனர்.
4 மில்லியன் முதல் 6 மில்லியன் வரையிலான பயணிகள் இவ்வாண்டு சிங்கப்பூருக்கு வரலாம் என கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியிருந்தது.
இதுவரை இங்கு வந்த மொத்த பயணிகளில் 2.2 மில்லியன் பேர் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் வந்தனர்.
இரண்டாம் காலாண்டில் இந்த எண்ணிக்கை 1.3 மில்லியனாகவும் முதலாம் காலாண்டில் 246,145 ஆகவும் பதிவாகி இருந்தது.
கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்டிருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தளர்த்தப்பட்ட பிறகு அனைத்துலகப் பயணிகள் சிங்கப்பூருக்கு வருவது அதிகரிக்கத் தொடங்கியது.
சிங்கப்பூருக்கு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு; இரண்டாமிடத்தில் இந்தியா

