கூட்டுரிமை வீடுகளின் விற்பனை நான்கு மாதத்திற்குப் பிறகு ஏற்றம்
கொண்டோமினியம் எனப்படும் கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை செப்டம்பர் மாதம் அதிகரித்துள்ளது. புதிய தனியார் வீடுகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட வரம்புக்குள் இருந்ததைத் தொடர்ந்து நான்கு மாதங்களாக வீழ்ச்சி கண்டு வந்த மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை மறு
படியும் உயரத் தொடங்கி இருப்பதாக எஸ்ஆர்எக்ஸ், 99.co ஆகிய சொத்துச் சந்தை இணையத்தளங்களின் முன்னோடி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. செப்டம்பரில் கைமாறிய கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை 1,331. இது ஆகஸ்ட் மாதம் விற்பனை ஆன 1,317 வீடுகளைக் காட்டிலும் 1.1 விழுக்காடு அதிகம். இருப்பினும் கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 22.8 விழுக்காடு வீழ்ச்சி. கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலைகள் தொடர்ந்து 26வது மாதமாக செப்டம்பரிலும் ஏற்றம் கண்டன. புறநகரில் தனியார் வீடுகளுக்கான தேவை வலு
வடைந்ததைத் தொடர்ந்து அந்த மாதத்தில் 1.7 விழுக்காடு விலை ஏற்றம் பதிவானது.
ஓமிக்ரான் தொற்றும் விதம் ஆய்வு
ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமி தொற்றும் விதம் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் தொற்றுடன் வாழும் உருமாற்றத்திற்கு வழிசெய்து இருப்பதாக டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்வி நிலையமும் தொற்றுநோய்களுக் கான தேசிய நிலையமும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
"ஓமிக்ரானின் அதிகம் பரவும் தன்மையின் விளைவாக அதிகமான மக்கள் இருதரப்பு நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்றுள்ளனர். அந்த ஆற்றல் மறுதொற்று ஏற்படுவதிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறது," என்று தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் டேவிட் லை தெரிவித்துள்ளார். "அடிப்படைத் தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோரைத் தொற்றும் ஓமிக்ரான் வகைக் கிருமியின் ஆற்றல் மிகவும் இலேசானது. மேலும், அவர்களின் நுரையீரலில் தொற்றை ஏற்படுத்துவதற்கும் அவர்களுக்கு உயிர்வாயு உதவி தேவைப்படுவதற்குமான தேவை ஏற்படாத வகையில் கிருமியின் வலு குறைந்திருக்கும்," என்றும் பேராசிரியர் லை தெரிவித்தார்.
100ல் 15 பேருக்கு மறுதொற்று
சிங்கப்பூரில் இதற்கு முன்னர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 100ல் 15 பேருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து உள்ளார். இந்த விகிதம் இனிவரும் நாள்களில் உயர்ந்தால் புதிய தொற்றலை ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
நோய்த்தொற்று நிலவரம் குறித்து நேற்று முன்தினம் விளக்கிய அவர், "மறுதொற்று விகிதத்தின் அடிப்படையில் நாட்டில் மற்றொரு கொவிட்-19 பேரலை உருவாகிறதா என்பதை அவர்கள் உற்றுநோக்கி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்த விகிதம் 15 விழுக்காடாக உள்ளது. அதாவது 100ல் 15 பேருக்கு மறுதொற்று ஏற்பட்டு உள்ளது. இது 50 விழுக்காடாக, அதிகரித்தால் இன்னொரு கொவிட்-19 அலை ஏற்படுவதாக அர்த்தம்," என்றார் திரு ஓங்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் புதிதாக கொவிட்-19 கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 4,000 என பதிவானது. இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (நேற்று) 9,000க்கும் 10,000க்கும் இடையில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகக் கூறிய அவர், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைதான் பயமுறுத்தும் நாளாக இருந்து வருகிறது என்றார். வாரஇறுதியில் பொதுமக்கள் அதிக சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அதன் தாக்கம் வழக்கமாக செவ்வாய்க்கிழமை வெளிப்படுகிறது.இந்நிலை யில் திங்கட்கிழமை 4,719 பேர் பாதிக்கப்பட்டனர்.

