அடுத்த தலைமுறைக்கான பலநோக்கு துறைமுகங்களுக்கான மாற்று எரிசக்தி தொடர்பான ஆய்வும் கடல்துறை எரிபொருளாக அமோனியாவைப் பயன்படுத்தலாமா என்பது பற்றிய யோசனையும் அடுத்த கட்ட ஆராய்ச்சியை நெருங்க உள்ளன. இதற்காக அடுத்த ஐந்தாண்டுகளில் செலவிட $22 மில்லியன் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த அம்சங்கள் தொடர்பாகவும் இதரத் திட்டங்களிலும் ஆழமான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிங்கப்பூர் கடல்துறை கல்விக்கழகம் (எஸ்எம்ஐ) இங்குள்ள இதர இரு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றும்.
கரிமத்தைக் குறைப்பது தொடர்பான தொழில்நுட்பங்கள் பற்றியும் துறைமுகப் பணிகளின் நிர்வாகத்தின் நடைமுறை ஆற்றலை மேம்
படுத்துவது குறித்தும் தேவைப்படும் நடவடிக்கைகளில் இவை ஈடுபடும்.
ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நேற்று நடத்தப்பட்ட 12வது எஸ்எம்ஐ கருத்தரங்கில் கலந்துகொண்ட நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
கடல்துறை எரிசக்தி மற்றும் நீடித்த நிலைத்தன்மை உன்னதத்துக்கான மேம்பாட்டு நிலையத்துக்கு எஸ்எம்ஐ $12 மில்லியன் நிதி வழங்கும். இந்நிலையம் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்காகத்தில் செயல்படுகிறது.
எரிசக்தி நிர்வாகம், கரிம நிர்வாகம், நீடித்து நிலைக்கவல்ல கடல்துறை செயல்பாடுகள் ஆகியவை தொடர்பாக 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகளின் தொடர்ச்சியே இது.
மேலும், இந்த நிலையம் இதுவரை 14 கடல்துறை கரிம ஒழிப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் பணியாற்றி உள்ளது.
கடல்துறை எரிபொருளாக அமோனியாவைப் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளும் இவற்றில் அடங்கும்.
தொழில்துறை பங்காளிகள் மற்றும் சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இவ்வாண்டின் செப்டம்பர் முதல் 16 இதர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களையும் இந்த நிலையம் கண்டறிந்துள்ளது.
கடல்துறை செயல்பாடுகளில் கரிம வெளிப்பாட்டையும் கரிம ஒழிப்பையும் நிர்வகிப்பதில் இந்த ஆய்வுப் பணிகள் கவனம் செலுத்தும். கரிமம் குறைந்த மாற்று ஏற்பாட்டுக்கு மாறும் சிங்கப்பூரின் எரிசக்தி உத்திக்கு உறுதுணையாகவும் இப்பணிகள் அமையும்.
சிங்கப்பூர் கடல்துறை சம்மேளனத்தின் கடல்துறை கரிம ஒழிப்பு தொடர்பான அனைத்துலக ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிப் பணிகள் அமைக்கப்பட்டதாக சிங்கப்பூர் கடல்துறை கல்விக்கழகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் கல்லூரியின் ஓர் அம்சமான சி4என்ஜிபி என்னும் நிலையம் $10 மில்லியன் நிதியைப் பெறும். இந்த ஐந்தாண்டு நிதியளிப்பு 2023ஆம் ஆண்டு ஜனவரி 2 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

