தம்மிடம் போடோக்ஸ் எனப்படும் அழகுபடுத்தும் சிகிச்சை பெற்றுக்கொண்ட பெண்ணுக்கு மரணம் விளைவித்ததாக 34 வயது மருத்துவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிகிச்சையின்போது சான் பிங்யி கவனக்குறைவுடன் நடந்து கொண்டதால் 31 வயது திருவாட்டி லாவ் லீ டிங் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சிகிச்சையை முன்னிட்டு குறிப்பிட்ட ஒருவகை மருந்தை அளவுக்கு அதிகமாகவும் மிக வேகமாகவும் திருவாட்டி லாவ்வின் உடலுக்குள் சான் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக திருவாட்டி லாவின் இதயம் செயலிழந்தது. கோமா நிலையில் இருந்த திருவாட்டி லாவ் ஐந்து நாள்கள் கழித்து மரணம் அடைந்தார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல்துறையிடமும் சுகாதார அமைச்சிடமும் புகார் அளித்தனர்.
திருவாட்டி லாவ்
வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி நண்பகல் அளவில் பிராஸ் பசா சாலையில் உள்ள ரிவைவல் மெடிக்கல் அண்ட் எஸ்தெட்டிக்ஸ் சென்டரில் நிகழ்ந்தது.
சான் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவாகும் என்று நம்பப்படுகிறது. அவர் $5,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் 7ஆம் தேதியன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சானுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

