ஈசூன் வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் 19 வயது இளையர் தமது தந்தையைக் கொன்றிருக்கக்
கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட அந்த இளையர்மீது இன்று கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு 7.05 மணி அளவில் ஈசூன் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்டிலிருந்து உதவி கேட்டு தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை அதிகாரிகள் சென்றடைந்தபோது வீட்டுக்கு வெளியே 47 வயது ஆடவர் சுயநினைவின்றி கிடந்ததைக் கண்டனர். அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவ உதவியாளர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்து கின்றனர். கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இளையருக்கு மரணத் தண்டனை விதிக்கப்படும்.
உயிரிழப்பதற்கு முன்பு அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் அண்டைவீட்டாரின் கதவைத் தட்டி உதவி கேட்டதாக அறியப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த குடியிருப்புக் கட்டடத்தின் நான்காவது மாடிக்கும் ஐந்தாவது மாடிக்கும் இடையில் உள்ள படிக்கட்டுகளில் ரத்தக் கறை தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

