பேருந்து ஒன்றைத் தொழில்நுட்பர் ஒருவர் பழுதுபார்த்துக்கொண்டு இருந்தபோது அதே பேருந்து அவர் தலை மீது விழுந்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் தேதியன்று நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் மலேசியரான 43 வயது தின் சூன் ஃபாட்டின் மண்டை ஓடு உடைந்தது. இதன் விளைவாக அவர் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், பேருந்தைப் பழுது பார்க்க சரியான கருவிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் தின்னின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று மரண விசாரணை அதிகாரி ஆதம் நகோடா தெரிவித்தார். திரு தின்னின் மரணம் வேலையுடன் தொடர்புடைய அசம்பாவிதம் என்றார் அவர்.
திரு தின், 2014ஆம் ஆண்டில்இருந்து ஸ்ட்ராய்ட்ஸ் ஆட்டோமோட்டிவ் சர்வீசஸ் நிறுவனத்தில் ஊழியராக இருந்தவர். இந்த நிறுவனத்தின் பழைய பெயர் எஸ்எம்ஆர்டி ஆட்டோமோட்டிவ் சர்வீசஸ் ஆகும். அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 26 பேருந்துகளையும் சிறு மின்சார வாகனங்களையும் பராமரிக்கும் குழுவுக்கு திரு தின் தலைவராக இருந்தார். கனரக வாகனங்களைப் பழுதுபார்க்கும்போது சரியான கருவிகளைப் பயன்படுத்தவேண்டும் என்று திரு ஆதம் நகோடா வலியுறுத்தினார்.

