தந்தையைக் கொன்ற குற்றத்திற்காக 19 வயது இளையர்மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் வசித்துவந்த புளோக் 653 ஈசூன் அவென்யு நான்கில் நேற்று முன்தினம் கொலை (அக்டோபர் 10) நடந்ததாகக் கூறப்பட்டது.
சைலஸ்நர் சியா ஜியே காய் தமது தந்தை எடி சியா வீ டெக், 47 கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. புளோக்கின் நான்காவது ஐந்தாவது மாடிகளுக்கு இடையே இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.
காணொளி வழியாக சைலஸ்நர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 12) காலை பத்து மணிக்கு முன்னிலையானார். மாண்டவரும் அவரது மனைவியும் சொத்துச் சந்தை தொழில் நடத்திவந்ததாகத் தெரிகிறது. தம்பதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சைலஸ்நர் அவர்களது ஆக இளைய மகன் என நம்பப்படுகிறது.
மாண்டவரின் முகமும் ஆடைகளும் இரத்தத்தில் படிந்திருந்ததாக சம்பவத்தைப் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார். அவர் சம்பவயிடத்திலே மாண்டதாக அறிவிக்கப்பட்டது. சைலஸ்நர் சியா சம்பவ இடத்திலே கைதுசெய்யப்பட்டார்.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.

