சிங்கப்பூரில் நாளை முதல் பிராய்லர் உயிர் கோழிகள் விற்பனை செய்யப்படும். எனினும், அவை குறைந்த எண்ணிக்கையிலே விற்கப்படும் என்று கூறப்பட்டது. வியாழக்கிழமை காலை மலேசியாவிலிருந்து வரவழைக்கப்படும் உயிர் கோழிகள் இங்குள்ள இறைச்சி வெட்டும் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கோழி இறக்குமதி நிறுவனமான கீ சோங் உணவு நிறுவனம் குறிப்பிட்டது. மாலை 2 மணிக்கு பின்னர் கோழி இறைச்சி முக்கியக் கடைகளில் விற்கப்படும். ஒரு சராசரி முழு உயிர் கோழியின் விலை $14.80. விலைகள் 10லிருந்து 16 விழுக்காடு அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டது.
மலேசியாவில் கோழி உற்பத்தி குறைந்து விலை ஏறியதால் அதைச் சமாளிக்கும் முயற்சிகளில் ஒன்றாகக் கடந்த ஜூன் 1 முதல் சிங்கப்பூருக்கான கோழி ஏற்றுமதிக்கு மலேசிய அரசாங்கம் தடைவிதித்தது. இந்தத் தற்காலிகத் தடை அக்டோபர் 11ஆம் தேதி முதல் நீக்கப்படும் என்று மலேசிய அதிகாரிகள் உறுதிசெய்தனர். இருப்பினும் ஒரு மாதத்திற்கு 1.8 மில்லியன் உயிர் கோழிகள் மட்டும் ஏற்றுமதி செய்யப்படும் என மலேசியா தெரிவித்தது. ஒப்புநோக்க தடைக்கு முன் இந்த எண்ணிக்கை 3.6 மில்லியனாக இருந்தது.


