புவிசார் அரசியல் பதற்றங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. உணவுப்பொருள் வழங்கீட்டு கட்டமைப்புகளும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன.
இத்தகைய சூழலில், சில சிங்கப்பூர் உற்பத்தித் துறை நிறுவனங்கள், மெக்சிகோவில் தொழிற்சாலைகளை அமைத்து பொருள்களைத் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலிக்கின்றன.
மெக்சிகோவில் பொருள் களைத் தயாரித்தால் வடஅமெரிக்க வாடிக்கையாளர்களை எட்டுவது எளிதாக இருக்கும்; தீர்வைகளும் தளவாடப் போக்குவரத்துச் செலவுகளும் குறைந்துவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
கொவிட்-19 தொற்று காரணமாக உலகளவில் பொருள், சேவை விநியோகக் கட்டமைப்பு பெரியளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
கப்பல்களில் உற்பத்திப் பொருள்களை அனுப்புவதற்கான செலவு பல மடங்கு கூடியிருக்கிறது. மெக்சிகோ மீது கண்வைக்கும் நிறுவனங்களில் 'ரேசர் டெக்னாலஜி மெடிகா' என்ற மருந்துப்பொருள் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றாகும்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளரான வில்லி கோ, இந்த மாதத் தொடக்கத்தில் மெக்சிகோ சென்று அங்கு தொழில் வாய்ப்புகளை அலசி ஆராய்ந்தார்.
மெக்சிகோ மக்கள் நிறுவனங்களை வரவேற்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல், மெக்சிகோவில் தொழில் நடத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை அவர்கள் மனம் திறந்து ஒளிவுமறைவு இல்லாமல் எடுத்துக் கூறி விளக்குகிறார்கள் என்று அவர் கூறினார்.
அந்த மெக்சிகோ வர்த்தகப் பயணத்திற்கு சிங்கப்பூர் துல்லியப் பொறியியல், தொழில்நுட்பச் சங்கமும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தன. அந்த ஏற்பாட்டின் பேரில் சிங்கப்பூரின் ஏழு நிறுவனங்கள் மெக்சிகோ சென்றன.
மெக்சிகோ பற்றி கருத்து கூறிய இந்தச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சைமன் லிம், மெக்சிகோவில் உற்பத்தித் துறை அலை அலையாகப் பெருகுகிறது. துல்லியப் பொறியியல் துறைக்குப் பெரும் தேவை நிலவுகிறது என்று கூறினார்.

